மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் யுபி டி20 லீக் தொடரில் அபாரமான ஃபார்மில் ஆடி வருகிறார். ஏற்கனவே சதம், அரைசதம் விளாசி தள்ளிய ரிங்கு சிங், தற்போது 48 பந்துகளில் 6 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 78 ரன்களை விளாசி அணியை காப்பாற்றி இருக்கிறார்.
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் பெரிய ஃபார்மில் இல்லாத ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் இந்திய அணியில் ரிங்கு சிங் ஃபினிஷராக சேர்க்கப்பட்டார். அதற்கேற்ப ரிங்கு சிங் பவுலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த உற்சாகத்தில் ரிங்கு சிங் யுபி டி20 லீக் தொடர்களில் அபாரமான ஃபார்மில் ஆடி வருகிறார். காசி ருத்ராஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீரட் மேவ்ரிக்ஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய காசி ருத்ராஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன்பின் களமிறங்கிய மீரட் மேவ்ரிக்ஸ் அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் கேப்டன் ரிங்கு சிங் களம் புகுந்தார். அப்போது 4வது விக்கெட்டுக்கு மாதவ் கவுசிக் உடன் ரிங்கு சிங் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர்கள் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்க்க, அதன்பின் ஒரு விக்கெட்டை கூட கொடுக்கவில்லை. கடைசி வரை களத்தில் இருந்த மாதவ் கவுசிக் 20 பந்துகளில் 34 ரன்களை சேர்த்தார்.
மறுபக்கம் ரிங்கு சிங் நிதானமாக தொடங்கி, 20 பந்துகளுக்கு பின் அதிரடியை தொடங்கினார். அதிலும் அடுத்தடுத்து சிக்சரை பறக்கவிட காசி ருத்ராஸ் அணி பவுலர்கள் என்ன செய்வதென தெரியாமல் திணறினர். இறுதியாக 15.4 ஓவர்களிலேயே 136 ரன்கள் எடுத்து மீரட் மேவ்ரிக்ஸ் அணி வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் 48 பந்துகளில் 6 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 78 ரன்களை குவித்தார்.
இதன் மூலமாக ரிங்கு சிங் மீண்டும் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார். இந்த யுபி லீக் தொடரில் ஏற்கனவே ரிங்கு சிங் 48 பந்துகளில் 108 ரன்களை விளாசியதோடு, 2 அரைசதங்களையும் குவித்துள்ளார். தற்போது 48 பந்துகளில் 78 ரன்களை விளாசி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.