மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கின்றது.
ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் கடந்த இரண்டு சீசன்களாக பட்டையை கிளப்பி வருகிறார். 2024 ஆம் ஆண்டு சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்கள் குவித்த சாய் சுதர்சன், 2025 ஆம் ஆண்டு 15 போட்டிகள் விளையாடி 759 ரன்கள் அடித்திருந்தார்.

இதில் ஒரு சதம், 6 அரை சதம் அடங்கும். சாய் சுதர்சனின் சராசரி 54 என்ற அளவிலும், ஸ்ட்ரைக் ரெட் 156 என்ற அளவில் இருந்தது. ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி சாய் சுதர்சன் அசத்தினார். இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சாய் சுதர்சன் இடம் பெற்றிருந்தார். இதனால் டி20 அணியிலும் சாய் சுதர்சன் முக்கிய இடம் வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதேபோன்று ஜடேஜா, சர்வதேச t20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரராக இடம்பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக அவர் செயல்பட்ட நிலையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் டி20க்கு என ஒரு தனி அணியை தயார் படுத்தும் முயற்சியில் கம்பீர், சூரியகுமார் யாதவ் இருந்தார்கள். இதனால் புதிய வீரர்களுக்கு அணியில் இடம் இருக்காது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும், பிசிசிஐ தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில்லை டி20 அணியில் சேர்த்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. பஞ்சாப் வீரரான கில் மட்டும் டி20 அணியில் திடீரென்று புகுத்தப்பட்ட நிலையில், தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப் அணி வீரர்களுக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஒரு நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.