மும்பை: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு இடம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும், இந்திய டி20 அணியின் டாப் ஆர்டரில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது.
இந்த மூன்று வீரர்களும் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதனால், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ள 2025 ஆசிய கோப்பை தொடர், இந்த முறை டி20 வடிவத்தில் நடைபெற உள்ளது. இதனால், அதிரடி ஆட்டக்காரர்களுக்கு அணியில் முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் இந்த மூன்று வீரர்களுமே ரன் வேட்டையாடியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் 15 போட்டிகளில் 650 ரன்கள் குவித்தார். அதே அணியில் அவருடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய சாய் சுதர்சன், 16 போட்டிகளில் 759 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 போட்டிகளில் 559 ரன்களை 160 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய வீரர்களுக்கு ஐந்து வார கால ஓய்வு கிடைத்துள்ளது. இதனால், சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் புத்துணர்ச்சியுடன் ஆசிய கோப்பையில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கும் இடையே குறைந்த நாட்களே இருந்தாலும், இந்த இளம் வீரர்களின் பணிச்சுமை கவனத்தில் கொள்ளப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டி20 உலகக் கோப்பை இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களைக் கருத்தில் கொண்டு, ஜெய்ஸ்வால், கில் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்திய அணியின் டாப் ஆர்டரின் முக்கிய வீரர்களாக உருவெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி, ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா போன்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த மூன்று இளம் புயல்களில் யாருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. .