மும்பை: கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். முதல் 2 லீக் போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ரன்கள் குவிக்க முடியாமல் திணறினார். ஆனால் கடந்த போட்டி முதல் தொடக்க வீரராக களமிறங்கி சதம் மற்றும் அரைசதம் விளாசி வெறியாட்டம் ஆடி இருக்கிறார்.
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால்,பிளேயிங் லெவனில் நிச்சயம் கொண்டு வரப்பட உள்ளதாக பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் இடது - வலது கூட்டணியை விரும்புபவர்.

இதனால் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணியை கம்பீர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனின் நிலை பரிதாபமாக மாறியதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் சஞ்சு சாம்சன் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
முதல் 2 போட்டிகளில் நம்பர் 6 வரிசையில் ஆடிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில் 3வது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், சதம் விளாசி சம்பவம் செய்தார். இந்த நிலையில் 4வது போட்டியில் இன்று களமிறங்கினார். இந்த போட்டியில் 46 பந்துகளில் 9 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 89 ரன்களை விளாசி தள்ளினார்.
அதிலும் சிஜோமோன் ஜோசப் வீசிய 5வது ஓவரில் சஞ்சு சாம்சன் 1 பந்தில் 13 ரன்களை விளாசி தள்ளினார். ஜோசப் நோ-பால் வீசியதால் இந்த சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இதன் மூலமாக சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆசியக் கோப்பை டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்.
அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும், சுப்மன் கில்லுக்கு முதன்மை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிறிய தவறை சஞ்சு சாம்சன் செய்தாலும், உடனடியாக அவரை அபிஷேக் சர்மா அல்லது சுப்மன் கில் கொண்டு வரப்படுவார்கள் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன் முதல் வாய்ப்பிலேயே தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.