துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் செய்த செயலை பார்த்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர் அருகில் வந்து சில விஷயங்களை சொன்னார். அதன் பிறகு சஞ்சு சாம்சன் சோகமாக அமர்ந்து இருந்தார். என்ன நடந்தது?
2025 ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற வீரர்கள் வார்ம்-அப் செய்து கொண்டிருந்தபோது, சஞ்சு சாம்சன் மட்டும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப்புடன் தீவிர விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டார். வலது புறமாகப் பாய்ந்து ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்ததற்காக அவருக்குப் பாராட்டுகளும் கிடைத்தன.

சிறிது நேரத்தில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் வந்து சுமார் மூன்று நிமிடங்கள் தீவிரமாக பேசினார். கம்பீர் பேசுவதை சாம்சன் மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த உரையாடல், கீப்பிங் என்பதை விட பேட்டிங் சம்பந்தப்பட்டதாகவே இருந்திருக்கக் கூடும் என்று யூகிக்கப்படுகிறது.
இந்த உரையாடலுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள்தான் சஞ்சு சாம்சனின் இடம் குறித்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. பேட்டிங் பயிற்சி தொடங்கியதும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் முதலில் பேட்டிங் செய்தனர்.
இந்த நால்வரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, சஞ்சு சாம்சன் தனது பேட்டிங் உபகரணங்களுடன் மைதானத்திற்குத் திரும்பினார். ஆனால், சிறிது நேரத்திலேயே அமைதியாக அங்கிருந்து நகர்ந்து, ஓய்வறைக்கு அருகில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் சென்று அமர்ந்துகொண்டார்.
துணைக் கேப்டன் சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இரண்டு, மூன்று முறை பேட்டிங் பயிற்சி செய்தனர். ஆனால், ஒருமுறை கூட சாம்சன் பேட்டிங் செய்ய அழைக்கப்படவில்லை. பின்னர், மீண்டும் வலைப்பயிற்சி பகுதிக்கு வந்த அவர், தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து, சாதாரணமாக ஒரு ஐஸ் பாக்ஸின் மீது அமர்ந்திருந்தார்.
இதற்கிடையில், ஒரு சுற்று பேட்டிங் முடித்த சிவம் துபே, தனது மீடியம் பேஸ் பந்துவீச்சை வீசிவிட்டு, மீண்டும் பேட்டிங் செய்யத் தயாரானார். அப்போதும் சாம்சன் ஐஸ் பாக்ஸிலேயே அமர்ந்திருந்தார். இறுதியாக, அனைவரும் பேட்டிங் செய்து முடித்த பிறகு, சாம்சன் வலைப்பயிற்சிக்குள் நுழைந்தார். ஒரு நெட் பந்துவீச்சாளர் வீசிய பந்தை அவரால் அடிக்க முடியவில்லை.
இதுவே அன்றைய தினம் அவருக்கு எப்படி அமைந்தது என்பதை உணர்த்தியது. இதன் மூலம் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், 2025 ஆசிய கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட மாட்டார் என ரசிகர்கள் தங்கள் வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.