சென்னை: இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பரும், துவக்க ஆட்டக்காரருமான சஞ்சு சாம்சன், 2025 ஆசியக் கோப்பை தொடரில் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.
கேரள கிரிக்கெட் லீக் (KCL) தொடரில், தான் வழக்கமாக ஆடும் தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து தன்னைத்தானே மாற்றிக்கொண்டு மிடில்-ஆர்டரில் களமிறங்க முடிவு செய்தது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கேரள கிரிக்கெட் லீக் தொடரில், கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். ஆகஸ்ட் 21, வியாழக்கிழமை அன்று நடந்த அதானி திருவனந்தபுரம் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 5ஆம் வரிசையில் களமிறங்க முடிவு செய்தார்.
இருப்பினும், கொச்சி அணி எளிதாக வெற்றி பெற்றதால், சாம்சனுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வழக்கமாக அதிரடியாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் சஞ்சு சாம்சன் இந்த திடீர் முடிவை எடுக்க காரணமே ஆசியக் கோப்பைதான்.
கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால், தற்போது சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதுடன், துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், "சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இல்லாததாலேயே சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார்" என்று கூறியிருந்தார். சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளதால், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தான் பேட்டிங் வரிசை குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையில், அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள, சஞ்சு சாம்சன் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை தயார்படுத்தி வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், சஞ்சு சாம்சன் மிடில்-ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "சஞ்சு ஒரு திறமையான வீரர், அவரால் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய முடியும். அவரை 5-வது அல்லது 6-வது வீரராக களமிறக்கலாம். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை" என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த புதிய முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிடில்-ஆர்டரில் சிறப்பாக விளையாடிய அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் தனது புதிய பேட்டிங் வரிசையில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.