அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரில், ஓமன் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி தடுமாறியபோது, தனி ஒருவனாக நின்று போராடி, அணியை சரிவிலிருந்து மீட்டதோடு மட்டுமல்லாமல், வரலாற்றுச் சாதனையையும் படைத்து இருக்கிறார் சஞ்சு சாம்சன். சஞ்சு சாம்சனின் இந்த முக்கியமான 56 ரன்கள் மட்டும் இல்லாதிருந்தால், சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்பாக இந்திய அணி ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்தத் தொடரின் முந்தைய போட்டிகளில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சனுக்கு, ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது வீரராகக் களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்திய அணி தடுமாறிய நிலையில், களத்திற்கு வந்த சாம்சன், நிதானமும், அதிரடியும் கலந்த ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இது சாம்சனின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் இல்லை என்றாலும், சற்று கடினமான ஆடுகளத்தில், ஓமன் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொண்டு, அவர் தனது அரைசதத்தை 41 பந்துகளில் எட்டினார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது மெதுவான அரைசதமாக இருந்தாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டிருந்தபோது, ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி, ஸ்கோர் போர்டை உயிர்ப்புடன் வைத்திருந்தது அவரது அனுபவத்தையும், முதிர்ச்சியையும் காட்டியது. சாம்சனின் இந்த அரைசதத்தின் உதவியால்தான், இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.
ஜிதேஷ் ஷர்மா-வை விட சாம்சன் மீது கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை வைத்து அவரை அணியில் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் அந்த நம்பிக்கையை சஞ்சு சாம்சன் காப்பாற்றியதோடு, சரித்திரத்திலும் இடம்பிடித்தார். ஓமனுக்கு எதிரான அரைசதத்திற்காக, அவர் ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று முறை ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன்பு, எம்.எஸ். தோனி, ரிஷப் பண்ட்போன்ற தலைசிறந்த வீரர்கள் கூட இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டி20 ஆசிய கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றார்.
ஓமன் அணிக்கு எதிராக இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆமீர் கலீம் (64) மற்றும் ஹம்மத் மிர்சா (51) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், ஓமன் அணி வெற்றிக்கு மிக அருகில் வந்தது. ஒரு கட்டத்தில், இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியை தழுவிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.