துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். "பாகிஸ்தான் மீது நமக்கு எவ்வளவு வலுவான உணர்வுகள் இருந்தாலும், விளையாட முடிவு செய்துவிட்டால், அதை விளையாட்டின் உணர்வுடன் ஆட வேண்டும்" என்று கார்கில் போரின் போது நடந்த போட்டியை உதாரணமாக கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் மோத வாய்ப்புள்ள நிலையில், இந்த 'கைகுலுக்கல்' சர்ச்சை குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சசி தரூர், அரசியலையும், ராணுவ மோதல்களையும் விளையாட்டுடன் கலக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

"எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், பாகிஸ்தான் மீது நமக்கு அவ்வளவு வலுவான உணர்வுகள் இருந்தால், நாம் அவர்களுடன் விளையாடியிருக்கவே கூடாது. ஆனால், ஒருமுறை அவர்களுடன் விளையாட முடிவு செய்துவிட்டால், நாம் அதை விளையாட்டின் உணர்வுடன் விளையாட வேண்டும், அவர்களுடன் கைகுலுக்கியிருக்க வேண்டும்."
"இதை நாம் முன்பே செய்திருக்கிறோம். 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் உச்சத்தில் இருந்தபோது, இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் நாம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினோம். நமது வீரர்கள் நாட்டுக்காக எல்லையில் உயிர்த்தியாகம் செய்து கொண்டிருந்த அந்த நாட்களில்கூட, நாம் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கினோம். ஏனென்றால், விளையாட்டின் உணர்வு என்பது நாடுகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் விஷயங்களிலிருந்து வேறுபட்டது. இதுதான் எனது பார்வை." என்று சசி தரூர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து வெளிப்பட்ட எதிர்வினைகள், விளையாட்டு உணர்வு இல்லாததையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். "முதல் முறை அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, இரண்டாவது முறை நம்மைத் திருப்பி அவமானப்படுத்த முடிவு செய்திருந்தால், அது இரு தரப்பிலும் விளையாட்டு உணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது" என்றார்.
2025 ஆசிய கோப்பை தொடரில், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் ஆத்திரமூட்டும் சைகைகளை வெளிப்படுத்தினர்.
பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், தனது அரைசதத்தை 'துப்பாக்கியால் சுடுவது' போலக் கொண்டாடினார். பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப், இந்திய ராணுவ நடவடிக்கையைக் கிண்டல் செய்யும் வகையில் 'விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது' போல சைகை செய்தார்.
இந்தச் செயல்களுக்காக, பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ, ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயங்கரவாதத் தாக்குதல் குறித்துப் பேசி, விளையாட்டில் அரசியலைக் கலந்ததாக ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.
இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் மாறி மாறி புகார் அளித்துள்ள நிலையில், இந்தச் சர்ச்சை பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்நிலையில், கார்கில் போர் காலத்தை உதாரணமாகக் காட்டி சசி தரூர் பேசி இருக்கிறார்.