துபாய்: இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே, கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வெறும் மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். இது முக்கியமாக இம்பாக்ட் பிளேயர் விதியால் ஏற்பட்டது. இருப்பினும், ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக அவர் இம்பாக்ட் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார்.
2024 டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இந்திய அணியில் இடம்பிடித்த, துபே ஒரே ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசினார். ஆனால், குறைவான வாய்ப்புகள் இருந்தபோதிலும் அவர் ஊக்கம் இழக்காமல், தனது பவுலிங் திறனை வளர்த்து வருகிறார். இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கலின் ஊக்கம் தான் இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய சிவம் துபே, "நிச்சயமாக, இன்றைய தொடக்கம் மிகவும் முக்கியமானது. நான் எப்போதும் ஒரு ஆல்-ரவுண்டராக நான்கு ஓவர்கள் பந்து வீசுவதற்கு தயாராக இருக்கிறேன். மூன்று அல்லது நான்கு ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைக்கும்போது, நான் அதற்கு தயாராக இருக்கிறேன்"
"இங்கிலாந்து தொடருக்கு கடந்த ஜனவரியில் நான் வந்தபோது, மோர்க்கல் எனக்கு சில விஷயங்களைக் கூறினார். ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே அதிகம் பந்து வீச வேண்டும் என்றும், மெதுவான பந்து தொடர்பாக சில விஷயங்களையும் கூறினார். எனது ஓட்டத்தின் முறை குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார். இந்த இரண்டு மூன்று விஷயங்களால், எனது பந்துவீச்சு மேம்பட்டு வருகிறது. எனது வேகமும் அதிகரித்து வருகிறது,"
நடு வரிசையில் துபே விளையாடுவதால், இந்தியாவின் பேட்டிங் பலமாகி உள்ளது. இதன் மூலம் 6 பேர் பவுலிங் வீச முடியும். அக்சர் படேல் 8வது இடத்தில் வருகிறார். இதன் மூலம் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்ப உதவுகிறது. துபே பேட்டிங்கில் அதிரடி காட்டி தனது திறமையை நிரூபிப்பதன் மூலம், அணியில் இடத்தை கெட்டியாக பிடிக்க முடியும். இதற்காக, அவர் ஷாட் பந்துகளை எதிர்கொள்வதற்கு பயிற்சி செய்து வருகிறார்.
இங்கிலாந்தில் சமீபத்திய டெஸ்ட் தொடரில் இந்தியாவின் உத்தியில், மூன்று நிபுணத்துவ பவுலர்களையும் மூன்று ஆல்-ரவுண்டர்களையும் நம்பியிருந்ததைப் போல, அனைத்து வடிவங்களிலும் ஆழமான பேட்டிங் வரிசை மிகவும் அவசியமாகி வருகிறது. ஷாட் பால் குறித்துபேசிய சிவம் துபே, "ஆமாம், நான் சில பகுதிகளில் அடிக்க முடியும். ஆனால், சில பவுலர்கள் ஷாட் பந்துகளுடன் என்னை எதிர்கொள்கின்றனர். எனவே, ஐபிஎல் மற்றும் அதற்குப் பிறகும், நான் மேலும் பல ஷாட்களைச் சேர்க்க பயிற்சி செய்து வருகிறேன்," என்று துபே கூறினார்.