மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகாrகர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த தொடரில் விளையாட வேக பந்துவீச்சாளர் பும்ரா ஆர்வம் காட்டி உள்ளதாக அஜித் அகார்கர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். இந்த தருணத்தில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி t20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என டாப் வரிசையில் உள்ள ஐந்து வீரர்களும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இதனால் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட டெஸ்ட் கேப்டன் கில், ஜெயஸ்வால் ஆகியோருக்கு மெயின் அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தருணத்தில் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதில் இந்திய அணி t20 பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. தற்போது இருக்கும் பேட்டிங் வரிசையை மாற்ற தேர்வுக்குழு விரும்பவில்லை. இதனால் ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் அணியில் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
இதேபோன்று ஸ்ரேயாஸ் தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்து விட்டார். எனினும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டி20 போட்டியில் அவரும் மெயின் அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு என்று கூறியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தலைமை தாங்கி இறுதிப்போட்டி வரை அணியை அழைத்து சென்றார்.
அது மட்டுமில்லாமல் 17 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 604 ரன்கள் அடித்திருந்தார். இதில் ஆறு அரை சதமும், 175 ஸ்டரைக் ரேட்டும் அடங்கும். ஸ்ரேயாஸ் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து தொடர் ஆசிய கோப்பை தொடர் என தொடர்ந்து இரண்டு போட்டிகளையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.