மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று தந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்கு, 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமைப் பண்புகளே, அதாவது கேப்டனாகும் தகுதியே, இந்திய டி20 அணித் தேர்வுக்குத் தடையாக இருக்கலாம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளது, கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

2024-ல் கொல்கத்தா அணியை சாம்பியனாக்கிய ஸ்ரேயாஸ், 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று, அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். குறிப்பாக, அந்த சீசனில் 17 போட்டிகளில் 604 ரன்களை 175 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.
இந்திய அணி தேடிக்கொண்டிருக்கும் 'அச்சமற்ற அணுகுமுறை'யை தனது ஆட்டத்தில் முழுமையாக வெளிப்படுத்தினார். அணிக்காக ரிஸ்க் எடுத்து ஆடியபோதும், ரன் குவிப்பிலும் அவர் நிலைத்தன்மையைக் காட்டினார். இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டும், இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பேசிய மான்டி பனேசர், "ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கப் போராடுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, அவரிடம் இருக்கும் தலைமைப் பண்புகள்தான். இந்திய அணியில் ஏற்கெனவே தலைமைப் பொறுப்புகளுக்கு வீரர்கள் இருக்கிறார்கள். அதனால், அணி நிர்வாகம், குறிப்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஒரு இளம் வீரரை, அதாவது சுலபமாக நிர்வகிக்கக்கூடிய ஒருவரை அணிக்குள் கொண்டு வர நினைக்கலாம்" என்று ஒரு புதிய கோணத்தை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஐபிஎல்-ல் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருப்பது, இந்திய அணிக்குள் வருவதை அவருக்குச் சற்று கடினமாக்குகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனாலும், அவர் தொடர்ந்து ரன் குவித்தால், நிச்சயம் அணியில் ஆட வேண்டும். ஆனால், இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமே இல்லை. இப்போது இருக்கும் வீரர்களை வைத்து, இந்தியாவால் 2 முதல் 3 அணிகளை உருவாக்கி, உலக அணிகளுடன் போட்டியிட முடியும். அந்தளவுக்கு இந்தியா அதிர்ஷ்டம் வாய்ந்தது" என்றும் பனேசர் குறிப்பிட்டார்.
ஒரு வீரரின் தலைமைப் பண்பே, அவரது தேசிய அணித் தேர்வுக்குத் தடையாகப் பார்க்கப்படுவது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டில் இது போன்ற அரசியல் புதிதல்ல என்றாலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நடப்பது மிகவும் மோசமானது என பலரும் கூறி வருகின்றனர்.