மும்பை: பாகிஸ்தானுக்கு எதிரான 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட இளம் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங், அவர்கள் ஆட்டமிழந்தது குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு, அபிஷேக் ஷர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். அவருடன் முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 28 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து அபாரமான தொடக்கத்தை அளித்தது. இவர்களின் அதிரடியால் இந்திய அணி 7 பந்துகள் மீதமிருக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது.

இவர்கள் ஆட்டம் பற்றி யோக்ராஜ் சிங் கூறியதாவது, "நான் ஒரு எளிமையான விஷயத்தைச் சொல்கிறேன். சுப்மன் கில்லும், அபிஷேக்கும் ஆடும் விதத்தைப் பார்க்கும்போது, நீங்கள் 250 ரன்கள் இலக்காக வைத்திருந்தாலும் அதை சேஸ் செய்துவிடலாம். ஆனால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை, இந்த இருவரும் 15 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
"சுப்மனும், அபிஷேக்கும் 15 ஓவர்கள் வரை ஆடினால், நமது இலக்கு 200 ரன்களாக இருக்கும், அதன்பிறகு 300 ரன்கள் கூட அடிக்கலாம். ஆனால், அபிஷேக்கிடம் நான் ஒன்றே ஒன்றுதான் சொல்வேன், இதை யுவராஜும் பலமுறை சொல்லியிருக்கிறான். 12 முதல் 15 ஓவர்கள் வரை களத்தில் நிற்க முயற்சி செய்யுங்கள், அது போதும்" என்றார்.
இவர்களது பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், "நேற்றைய போட்டியைக் கூட பாருங்கள், 9 ஓவர்களில் 100 ரன்களை அடித்துவிட்டோம். 10வது ஓவரில் 105 ரன் தான் எடுத்தோம். 10வது ஓவரில் சுப்மன் ஆட்டமிழந்ததும், அடுத்தடுத்து அபிஷேக்கும் வெளியேறிவிட்டார். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகம் சார்ந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சுப்மன் கில் இரண்டு முறையும் ஒரே மாதிரியான லைன் அண்ட் லென்த் பந்தில் ஆட்டமிழந்துள்ளார். இது கவலைக்குரிய விஷயம், இதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் யோக்ராஜ் சிங் சுட்டிக்காட்டினார்.
வீரர்களின் மனோபாவம் குறித்தும் பேசிய யோக்ராஜ் சிங், "நீங்கள் விளையாட்டுக்கு மேல் பெரியவர் ஆகிவிட முடியாது. நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி. ஒரு வீரரின் மூளை, விளையாட்டை விடப் பெரியதல்ல. நீங்கள் எப்போதும் ஒரு மாணவனாகவே இருக்க வேண்டும். எந்த அளவிற்கு மாணவனாக இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். இந்திய அணி வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், நேற்று நடந்தது போல இருக்கக் கூடாது. போட்டியை நம் கையில் கொண்டு வந்த பிறகு, அதை நழுவ விடக்கூடாது. ஒரு வீரர் 20 ஓவர்கள் வரை விளையாட வேண்டும்" என்று கூறினார்.