துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திடம், இலங்கை அணி தோல்வியை தழுவி இருப்பது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் மோதுகின்றன.
நான்கு அணிகளும் தங்களுக்குள் ஒருமுறை மோதி கொள்ள வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். அந்த வகையில் இந்திய அணி பலமாக இருப்பதால், அவர்கள் பைனலுக்கு சென்று விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாவது அணி யார் என்ற போட்டியில் பாகிஸ்தான் இலங்கை ஆகிய அணிகள் முன்னிலையில் இருந்தது. தற்போது இலங்கை அணி வங்கதேசத்துக்கு எதிராக எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவிப்பதால் அந்த அணி வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த தருணத்தில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முடியுமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தற்போது பார்க்கலாம்.
இலங்கை அணி பைனலுக்கு செல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக தோல்வியை தழுவ வேண்டும். இதேபோன்று இலங்கை அணி எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக கண்டிப்பாக வெற்றியை பெற வேண்டும். அப்படி நடைபெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி பாகிஸ்தானை விட அதிகமாக இருந்தால் இலங்கை அணி தான் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.
ஒரு வேளை இந்தியாவிடம் தோல்வியை தழுவும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் பாகிஸ்தான் அணி பைனலுக்கு சென்று விடும். இல்லை என்றால் இந்திய அணி பாகிஸ்தான் அல்லது இலங்கை அணிக்கு எதிரான இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் தோற்க வேண்டும். இதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் இலங்கை அணி கிட்டத்தட்ட தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த முறை ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்பட்ட போது இலங்கை அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.