துபாய்: இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியின் 'கைகுலுக்கல் சர்ச்சை' தொடர்பாக, பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். "தோல்விக்கு நீங்கள் சொல்லும் சமாதானங்களைக் கேட்க இங்கே யாரும் விரும்பவில்லை" என்று அவர் கூறியிருப்பது, இந்தச் சர்ச்சையில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் குரூப் சுற்றுப் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார். இந்தச் செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சுனில் கவாஸ்கர் இதுகுறித்து தனது காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கவாஸ்கர் கூறுகையில், "அவர் (சல்மான் அகா) பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்ததால் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை என்று நான் நினைக்கிறேன். மக்கள் முக்கியமாக வெற்றி பெற்ற கேப்டன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கவே விரும்புவார்கள், தோற்ற அணியின் சமாதானங்களைக் கேட்க அல்ல" என்றார்.
இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததற்கு, பெஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிலவும் அரசியல் சூழலே காரணம் என்று கூறப்படுவது குறித்துப் பேசிய கவாஸ்கர், "விளையாட்டும் அரசியலும் ஒருபோதும் தனித்தனியாக இருந்ததில்லை - இதைப் பார்க்க நீங்கள் பல வருடங்கள் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். அந்த நிலைப்பாட்டை எடுத்ததற்காக நான் யாரையும் விமர்சிக்க மாட்டேன், அதுகுறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. அரசியல் குறிப்புகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினால், அது என் தகுதிக்கு அப்பாற்பட்ட கொள்கைகள் மற்றும் சிக்கல்களுக்குள் சென்றுவிடும்" என்றார்.
கைகுலுக்காதது கிரிக்கெட் விதிகளுக்குப் புறம்பானதா என்ற கேள்விக்கு பதிலளித்த கவாஸ்கர், அது வீரர்களின் தனிப்பட்ட உரிமை என்றார். "நான் அதை நேரில் பார்க்கவில்லை, ஆனால் இறுதியில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது ஒவ்வொரு தனிநபரின் விருப்பம். களத்தில், சில நேரங்களில் மக்கள் உங்களைத் திட்டுவார்கள், ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைச் சொல்வார்கள். அப்படி யாராவது உங்களைத் திட்டியிருந்தால், அவர்களுடன் சென்று கைகுலுக்கச் சொல்வது அதிகமாக எதிர்பார்ப்பதாகும்." என்று அவர் குறிப்பிட்டார்.
"களத்தில் என்ன நடந்தது, வார்த்தைகள் பரிமாறப்பட்டதா என்பது எனக்குச் சரியாகத் தெரியாது, ஆனால் ஒரு தனிநபர் கைகுலுக்க வேண்டாம் என்று முடிவு செய்தால், அதைச் செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு" என்று கவாஸ்கர் தெரிவித்தார்.