துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடந்துகொண்ட விதம் குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மிகக் கடுமையாகச் விமர்சனம் செய்துள்ளார். இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததை ஒரு காரணமாக வைத்து, பாகிஸ்தான் அணி செய்த செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், குறிப்பாகக் கட்டாய பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணித்ததற்காக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டி முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து, பிசிபி, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் கிரிக்கெட்டின் விளையாட்டு உணர்வை காக்கத் தவறிவிட்டார் என்று கூறி, அவரை நீக்கக் கோரி ஐசிசியிடம் அதிகாரப்பூர்வப் புகார் அளித்தது. ஐசிசி அந்தப் புகாரை நிராகரித்த போதிலும், பிசிபி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிரான போட்டியைப் புறக்கணிப்போம் என்று மிரட்டி, போட்டியை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தியது.

இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கையில் கவாஸ்கர் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், "கிரிக்கெட் விதிமுறைகளில் கைகுலுக்கல் கட்டாயமானது என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்கும்போது, பிசிபி-யின் புகார் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. பல விளையாட்டுகளில், மோதலில் ஈடுபட்ட வீரர்கள் போட்டிக்குப் பிறகு கைகுலுக்கிக் கொள்ளாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஐசிசி இந்தப் புகாரை சரியாக புறக்கணித்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கவாஸ்கர் தனது கட்டுரையில், "ஆனால், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் அணி கட்டாய பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணித்ததுதான். அவர்கள் கேப்டனையோ, வீரர்களையோ, பயிற்சியாளரையோ அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அவர்களது உதவிக்குழுவிலிருந்து யாராவது ஒருவராவது ஊடகங்களைச் சந்தித்திருக்கலாம். அது நடக்கவில்லை. கட்டாயமான ஒன்றைத் தவிர்த்ததற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியை ஒரு மணி நேரம் தாமதப்படுத்திய செயலையும் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். "மற்றொரு விஷயம், போட்டியை நிறுத்தி வைத்து ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது, ஒருவித கசப்புணர்வை ஏற்படுத்தியது. போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் குறித்து பிசிபி-க்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருந்தால், இந்தியாவிடம் தோற்ற பிறகும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டிக்கு முன்பும் அவர்களுக்கு இரண்டு முழு நாட்கள் இருந்தன. அப்போது விவாதித்திருக்கலாம். ஆனால், டாஸ் போடும் நேரம் வரை மைதானத்திற்கே வராமல், அனைவரையும் பதற்றத்தில் வைத்திருந்து, அவர்கள் போட்டியைப் பணயக்கைதியாக வைத்திருந்தனர்" என்று அவர் சாடியுள்ளார்.
"விதிமுறைகளிலேயே இல்லாத ஒரு விஷயத்திற்காக போட்டி நடுவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேரம் பேசி, போட்டியை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தியதற்கு எந்தவிதமான காரணமும் ஏற்கத்தக்கதல்ல. நடுவர்களை நியமிக்கும் ஐசிசி, எந்த மன்னிப்பும் கேட்கப்படவில்லை என்று கூறிய பிறகும், போட்டி நடுவர் மன்னிப்பு கேட்டதால்தான் விளையாட ஒப்புக்கொண்டோம் என்று பிசிபி கூறியது. 'வருந்தத்தக்க தவறான தகவல் தொடர்பு' என்ற வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, அதுதான் மன்னிப்பு என்று அவர்கள் கூறினார்கள்" என்று கவாஸ்கர் தனது கட்டுரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்களை வெளுத்து வாங்கியுள்ளார்.