துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடர் இன்று முதல் தொடங்கும் நிலையில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் புதன்கிழமை யுஏஇ அணியுடன் பல பரிட்சை நடத்துகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதன் காரணமாக தொடக்க இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுதான் தற்போது விவாதத்தை ஏற்படுத்திருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவிடம் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சூரியகுமார், இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்படும் போது நான் உங்களுக்கு யாரை தேர்வு செய்திருக்கிறோம் என்று தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கின்றேன். ஆனால் நீங்கள் சஞ்சு சாம்சன் குறித்து கவலைப்பட வேண்டாம். நாங்கள் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்கின்றோம்.
நாளை நாங்கள் சரியான முடிவை எடுப்போம். இந்தத் தொடரில் நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. யுஏஇ அணியும் சமீபி கால போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்கள். பெரிய அணிகளுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறார்கள். நிச்சயம் இந்த தொடர் அவர்களின் வெற்றிக்கு முதல் படியாக இருக்கும். இந்த தொடரில் களமிறங்கும் மற்ற அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவர்களுக்கு எதிராக விளையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன். நாங்கள் ஒரே அணியாக கடைசியாக டி20 போட்டிகளில் ஜனவரி பிப்ரவரி மாதம் தான் விளையாடினோம். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் தொடரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் அனைவரும் விளையாடி இருக்கின்றோம். ஜூன் மாதத்திற்கு பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பெரிய அளவில் நாங்கள் விளையாடவில்லை. இது நிச்சயம் ஒரு சவால் தான் இந்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படுவோம் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.