மும்பை: 15 போட்டிகளில் டக் அவுட்டாகினாலும், எனக்கு அடுத்தப் போட்டியிலும் வாய்ப்பு அளிப்பேன் என்றும், அதனை எழுதிக் கொடுக்கவும் தயார் என்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது எனது மனதில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அபிஷேக் சர்மா. ஆசியக் கோப்பையில் 6 இன்னிங்ஸில் ஆடிய அவர், ஹாட்ரிக் அரைசதம் உட்பட 314 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதனால் அபிஷேக் சர்மாவை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் டி20 கிரிக்கெட்டில் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஐசிசி ரேட்டிங் புள்ளிகளில் 931 புள்ளிகளை பெற்று அபிஷேக் சர்மா புதிய வரலாறு படைத்தார். ஐசிசி டி20 தரவரிசையில் 919 புள்ளிகளை டேவிட் மலான் எடுத்ததே சாதனையாக இருந்தது.
அந்த சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்து புதிய வரலாறு படைத்தார். இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கு பின் நேர்காணல் ஒன்றில் அபிஷேக் சர்மா பேசுகையில், ஐபிஎல் தொடருக்கு பின் முதல்முறையாக ஜிம்பாப்வே டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டேன். அந்தத் தொடரில் சதம் விளாசி இருந்தாலும், இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
இதன்பின் மீண்டும் வங்கதேச டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டேன். அந்த டி20 தொடரில் பெரிதாக என்னால் ரன்களை சேர்க்க முடியவில்லை. அப்போது சூர்யகுமார் யாதவ் நேரடியாக என்னிடம் வந்து, இந்திய அணிக்கு நீ மிகவும் முக்கியமான வீரர். நீ இன்னும் 15 போட்டிகளில் டக் அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்தப் போட்டியிலும் உனக்கு வாய்ப்பு அளிப்பேன்.
இதனை நான் எழுதி கூட கொடுக்கிறேன் என்றார். அது எனக்குள் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் உருவாக்கியது. ஒரு கேப்டனின் ஆதரவு இருக்கும் போதும், நம்மால் கூடுதல் சுதந்திரமாக விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை சஞ்சு சாம்சனிடம் கம்பீர் பேசுகையில், இன்னும் நீ 21 போட்டிகளில் டக் அவுட்டாகும் வரை உனக்கு வாய்ப்பு அளித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறி இருந்தார்.
இதனால் பயிற்சியாளர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடி வருவதாகவும் தெரிகிறது. அதன் பலன் ஒவ்வொரு தொடரின் முடிவுகளிலும் தெரிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்