மும்பை: இது மும்பை இந்தியன்ஸ் அணி அல்ல.. நீ ஆடிக் கொண்டிருப்பது ஐபிஎல் தொடரும் அல்ல என்று இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மாவை பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் வம்புக்கு இழுத்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக திலக் வர்மா வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், ஸ்டம்ப் மைக்கில் இந்த வார்த்தைகள் பதிவாகி இருக்கிறது.
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தப் போட்டிக்கு பின் ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவர் மற்றும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக் கொள்ள இந்திய அணி விரும்பவில்லை. அதேபோல் மோசின் நக்வியும் பரிசு விழாவிற்கு முறையாக வரவில்லை.

இதனால் இந்திய அணி வீரர்கள் கோப்பையை பெற்றுக் கொள்ளாமலேயே, கோப்பை இருப்பதாக நினைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டி20 உலகக்கோப்பையை பெற்ற ரோகித் சர்மாவின் ஸ்டைலில் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கோப்பையை கையில் வைத்திருப்பதாக நினைத்து கொண்டாடினார். இந்திய வீரர்களின் இந்தக் கொண்டாட்டம் மக்களிடையே பேசுபொருளாகியது.
அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3வது ஓவர் முதல் கடைசி வரை களத்தில் நின்று அசத்தலாக ஆடிய திலக் வர்மா, புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அழுத்தம் நிறைந்த போட்டி மட்டுமல்லாமல், மிகவும் முக்கியமான நேரத்தில் திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் விளாசியது இந்திய ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட 2022 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தனியாளாக நின்று எப்படி பாகிஸ்தான் அணியை வீழ்த்தினாரோ, அதேபோல் திலக் வர்மா தனியாளாக போராடி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் திலக் வர்மாவின் கவனத்தை சிதறடிக்க பாகிஸ்தான் அணியின் வீரர்கள் களத்திலேயே முயற்சித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக திலக் வர்மா பேசுகையில், நான் எப்போதும் சொல்வதை போல், இந்திய அணிக்காக போட்டிகளை வெல்ல வேண்டும். எனது பேட்டிங்கில் அடிப்படை விதிகளை மட்டுமே பின்பற்றினேன். பேட்டிங்கின் போது ஒரு வார்த்தை கூட பாகிஸ்தான் பவுலர்களை பற்றி பேசவில்லை. ஆனால் பாகிஸ்தான் பவுலர்கள் என்னை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தார்கள்.
பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் இடையில் எப்போதும் அது நடந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அனைத்தையும் வெளியில் சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு ரியல் பதிலடி, பேட்டிங்கின் மூலமாக வெற்றி பெறுவது தான். எப்போது நாட்டிற்காக ஆடுவது தான் முக்கியம். அதற்கான என் உயிரையும் கொடுக்க தயார். அதனை சிறுவயது முதலே மனதில் வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும், திலக் வர்மாவின் பேட்டிங்கின் போது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், இது ஒன்றும் ஐபிஎல் தொடரும் அல்ல.. நீ ஒன்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடவில்லை என்று வம்புக்கு இழுத்தார். அப்போதும் திலக் வர்மா கொஞ்சம் கூட கவனம் சிதறாமல் பேட்டிங்கில் மட்டுமே குறியாக இருந்தார்.