துபாய்: ஜெய் ஷா தலைமையில் நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல் ஓடி ஒளிந்து இருக்கிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவருமான மோஷின் நக்வி. ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வழங்குவது தொடர்பான சர்ச்சையை பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளதால், மோஷின் நக்வி இந்தக் முடிவை எடுத்து இருக்கலாம் என தெரிகிறது.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரமோ அவருக்கு உள்நாட்டு அரசியல் பணிகள் இருப்பதாக சப்பைக்கட்டு கட்டி உள்ளது. செவ்வாய்க்கிழமை துபாயில் தொடங்கியுள்ள நான்கு நாட்கள் நடைபெறும் ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ஆசிய கோப்பை விவகாரத்தை எழுப்ப பிசிசிஐ தயாராகி வருகிறது.

இந்த நிலையில், பிசிபி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், மோஷின் நக்வி "உள்நாட்டு அரசியல் பிரச்சனைகள்" காரணமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் போக வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்படி என்ன முக்கிய அரசியல் பிரச்சனை என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.
நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள மிக முக்கியமான தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில், நக்வி பங்கேற்காத பட்சத்தில், அவருக்குப் பதிலாக பிசிபியின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுமையர் சையத் கலந்துகொள்வார் என்றும், நக்வி ஒருவேளை காணொளி வாயிலாகக் கூட்டத்தில் இணைய வாய்ப்புள்ளது என்றும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். நக்வியின் இந்திய எதிர்ப்புப் பேச்சுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பிசிசிஐயின் ஆதரவுடன், இந்திய வீரர்கள், அமீரக கிரிக்கெட் வாரியத் தலைவர் காலித் அல் ஜரூனி அல்லது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோரைக் கொண்டு பரிசளிக்கக் கோரினர். ஆனால், அதை மறுத்த நக்வி, தாம்தான் கோப்பையை வழங்குவேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
இறுதியில், யாரும் எதிர்பாராத விதமாக, அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் மேடையிலிருந்து கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அன்று முதல், அந்த ஆசிய கோப்பை, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் அரசியல்வாதியான நக்வியின் அனுமதியின்றி அதை வெளியே எடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ முறையிட்டும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இந்த விவகாரத்தை ஐசிசி-யிடம் கொண்டு செல்வதாக பிசிசிஐ எச்சரித்தது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, "நவம்பர் 3-ஆம் தேதிக்குள் கோப்பை கிடைக்காவிட்டால், துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவோம். ஐசிசி நிச்சயம் நியாயம் வழங்கும் என்று நம்புகிறோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
தற்போது, பிசிசிஐயின் முன்னாள் செயலாளரான ஜெய் ஷாவே ஐசிசியின் தலைவராக இருப்பதால், பிசிசிஐயின் புகாருக்கு நிச்சயம் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில்தான், பிசிசிஐயின் கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவே மோஷின் நக்வி ஐசிசி கூட்டத்தைப் புறக்கணிக்கத் திட்டமிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தச் சர்ச்சை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதை கிரிக்கெட் உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.