துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது குறித்து ஐக்கிய அரபு அமீரக (UAE) அணியின் கேப்டன் முஹம்மது வசீம் வேதனையுடன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாடுகளையும், அவர்களின் திட்டமிட்ட பந்துவீச்சையும் அவர் மனதாரப் பாராட்டினார்.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13.1 ஓவர்களில் வெறும் 57 ரன்களுக்கு சுருண்டது. இந்த எளிய இலக்கை இந்திய அணி வெறும் 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டியது.

ஐக்கிய அரபு அமீரக அணி, ஒரு கட்டத்தில் 8 ஓவர்களில் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. ஆனால், ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக, குல்தீப் யாதவ் வீசிய 9-வது ஓவரில், கேப்டன் வசீம் உட்பட மூன்று விக்கெட்டுகள் சரிந்தன.
இந்தப் போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் இது பற்றி பேசிய முஹம்மது வசீம், தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். "ஒரு பேட்டிங் அணியாக நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் ஒரேடியாக இழந்தது ஆட்டத்தில் எங்களைப் பின்னுக்குத் தள்ளியது" என்று அவர் கூறினார்.
இந்திய அணியின் பந்துவீச்சைப் பாராட்டிப் பேசிய வசீம், "அவர்கள் ஒரு அற்புதமான அணி. மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எதிராக தங்களது திட்டங்களை மிகச் சரியாக செயல்படுத்தினார்கள். அதனால்தான் அவர்கள் உலகின் நம்பர் 1 அணியாக இருக்கிறார்கள்" என்று புகழாரம் சூட்டினார்.
இந்த படுதோல்வியில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்த வசீம், "ஒரு அணியாக, நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வலுவாக மீண்டு வர முயற்சிப்போம்" என்று உறுதியுடன் கூறினார்.
குல்தீப் யாதவ் (4 விக்கெட்) மற்றும் சிவம் துபே (3 விக்கெட்) ஆகியோரின் பந்துவீச்சு, ஐக்கிய அரபு அமீரக அணியை நிலைகுலையச் செய்தது. பும்ரா, அக்சர் படேல், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.