துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பும்ரா, ஹர்திக் பாண்டியா எனப் பல நட்சத்திர வீரர்கள் மீது கவனம் குவிந்துள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான், "இவர்கள் யாருமல்ல, 'மிஸ்டரி ஸ்பின்னர்' வருண் சக்கரவர்த்திதான் இந்தியாவின் துருப்புச் சீட்டாக இருப்பார்" என்று கூறி, கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு புதிய விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்துப் பேசிய இர்பான் பதான், "பும்ராவைத் தவிர்த்துப் பார்த்தால், அணியில் மற்றொரு எக்ஸ்-ஃபேக்டரைக் கண்டுபிடிப்பது கடினம். ஹர்திக், அக்சர் என இரண்டு ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் வருண் சக்கரவர்த்தி எப்படிச் செயல்படப் போகிறார் என்பதைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால், இது அவருக்கு ஒரு மீண்டு வரும் கதையாக (redemption story) இருக்கும்," என்று குறிப்பிட்டார்.

2021 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியின் முக்கிய நம்பிக்கையாகக் களமிறக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தாமல் பெரும் ஏமாற்றம் அளித்தார். அந்த சோகத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர், தற்போது அபாரமான ஃபார்மில் இருக்கிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 5 டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அதைத் தொடர்ந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார்.
"2021 உலகக் கோப்பையில் அவர் சரியாகச் செயல்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போது அவர் அபாரமான ஃபார்மிலும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார். அதனால், இந்திய அணிக்குத் தேவையான அந்த 'எக்ஸ்-ஃபேக்டர்' தாக்கத்தை அவரால் நிச்சயம் ஏற்படுத்த முடியும்," என்று இர்பான் பதான் அடித்துச் சொல்கிறார்.
பும்ரா, பாண்டியா போன்ற வீரர்களின் அனுபவம் அணிக்கு பலமாக இருந்தாலும், துபாய் ஆடுகளத்தில் வருண் சக்கரவர்த்தியின் 'மிஸ்டரி' சுழற்பந்து வீச்சு, எதிரணிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 10-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துடனும், செப்டம்பர் 14-ம் தேதி பாகிஸ்தானுடனும் இந்தியா மோத உள்ள நிலையில், வருண் சக்கரவர்த்தியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.