அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது பயணத்தை துபாயில் இருந்து அபுதாபிக்கு மாற்றியுள்ளது. இதுவரை துபாயில் தனது முதல் இரண்டு குரூப் சுற்றுப் போட்டிகளில் ஆடிய இந்திய அணி, அடுத்து அபுதாபி மைதானத்தில் ஆட ஓமன் அணிக்கு எதிராக ஆட உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் இந்திய அணி களம் காண்கிறது. வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டியில், ஆசியக் கோப்பையில் அறிமுக அணியான ஓமனை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 74 டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்திருந்தாலும், இந்திய அணி இதற்கு முன்பு ஒரேயொரு முறை மட்டுமே இங்கு விளையாடியுள்ளது.

கடந்த 2021 டி20 உலகக் கோப்பையின் போது, இதே அபுதாபி மைதானத்தில்தான் இந்திய அணி தனது ஒரே டி20 போட்டியில் விளையாடியது. அந்தத் தொடர் இந்திய ரசிகர்களுக்கு ஒரு கசப்பான நினைவாக இருந்தாலும், அபுதாபியில் நடந்த அந்த குறிப்பிட்ட போட்டி இந்திய அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியைத் தந்தது.
அப்போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து, சூப்பர் 12 சுற்றிலிருந்தே வெளியேறும் அபாயத்தில் இருந்த இந்திய அணிக்கு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டி வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, பேட்ஸ்மேன்களின் அபார திறமையால் மெகா ஸ்கோரை எட்டியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி, அந்த முடிவைத் தவிடு பொடியாக்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் குவித்ததுடன், இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த வலுவான அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பேட்டிங் ஆர்டரில் பதவி உயர்வு பெற்ற ஹர்திக் பாண்டியா வெறும் 13 பந்துகளில் 35 ரன்களையும், ரிஷப் பண்ட் 13 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 27 ரன்களையும் விளாசித் தள்ள, இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது.
211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர். முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். கரீம் ஜனத் மட்டும் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்துப் போராடினாலும், மற்ற வீரர்களின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. இறுதியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, அந்த உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
2025 ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. மறுபுறம், ஓமன் அணி தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இதுவரை களமிறங்காத சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. எது எப்படி இருந்தாலும், அபுதாபியில் தனது இரண்டாவது டி20 போட்டியில் களம் காணும் இந்திய அணி, முந்தைய போட்டியைப் போலவே ஒரு மெகா வெற்றியைப் பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.