துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் யுஏஇ அணியை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி எட்டு மணிக்கு நடைபெறும். ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் கடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது ஆட்டத்தின் நடுவராக செயல்பட்ட ஆண்டி பைர்கிராப்ட் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதாக கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி தொடங்கும் போது வீரர்கள் இருவரும் கைகுலுக்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியதே பிரச்சனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து அவர் விலகினால் மட்டுமே நாங்கள் தொடரில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி ஏற்பது போல் தெரியவில்லை. இதனால் யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா பங்கேற்கவில்லை. இது பாகிஸ்தான் விலகலை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஒருவேளை யுஏஇ அணிக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால் அந்த அணியால் சூப்பர் 4 சுற்றுக்கு செல்ல முடியுமா என்பதை தற்போது பார்க்கலாம். ஒரு அணி, போட்டியில் விளையாட மாட்டோம் என விலகினால் எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி போட்டியை புறக்கணித்தால் யுஏஇ அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு அவர்கள் 4 புள்ளிகளை பெற்று விடுவார்கள். இதன் மூலம் இந்தியா, யுஏஇ அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இதன் மூலம் பாகிஸ்தானின் பயணம் முடிவுக்கு வந்துவிடும். சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவது ஆசிய கிரிக்கெட் சங்கீதத்திற்கு பெரும் லாபத்தை தரும். ஒரு வேலை பாகிஸ்தான் விலகினால் நிச்சயம் அது மிகப்பெரிய பின்னடைவை தொடருக்கு வழங்கும்.