துபாய்: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செய்யும் அரசியல் காரணமாக பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற போது இந்திய அணி கேப்டன் சூரியக்குமார் யாதவ் டாஸ் வீசப்பட்டபோது பாகிஸ்தான் கேப்டனுக்கு கைகுலுக்கவில்லை.
இதேபோன்று போட்டி முடிவடைந்த நிலையில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது பாகிஸ்தான் வீரர்களை சந்தித்து இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும் பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய கேப்டன் சூரியகுமார், பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து பேசியதும் பாகிஸ்தானை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. அப்போது, போட்டி நடுவரான ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி பயகிராப்ட் தான் இரு அணி கேப்டன்களும் கைகுலுக்க வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியானது.
இதனால் கடுப்பான பாகிஸ்தான் ஆன்டி பயகிராஃப்ட் மாற்றப்பட்டால் மட்டுமே ஆசியக் கோப்பை போட்டியில் தொடர்வோம் என்றும் இல்லை என்றால் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தது. இதனால் இந்த போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்ற உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி டாஸ் 7:30 மணிக்கு வீசப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் போட்டி 9 மணிக்கு தான் தொடங்கியது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆண்டி பயகிராப்டை மாற்றக் கூறி பாகிஸ்தான் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஒரு வேலை ஆட்டத்தில் இருந்து வெளியேறினால் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்படும்.
இப்படி இருக்கும்போது பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் முடிவை எடுக்காது. மேலும் ஐசிசி தலைவராக ஜெய்ஷா உள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்த கோரிக்கையும் எடுபடாது. அப்படி இருக்க பாகிஸ்தான் ஏன் இந்த தேவையில்லாத நாடகத்தை நடத்தியது என்று பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளது. இதற்கு காரணம், இந்தியாவிடம் அடைந்த தோல்விதான்.
பாகிஸ்தான் அணி தொடர்ந்து இந்தியாவிடம் தோல்வியை தழுவி வருகிறது .மேலும் பரிசளிக்கும் நிகழ்ச்சியில் சூரியகுமார் யாதவ் பேசிய பேச்சும் அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதிலிருந்து பிரச்சனையை திசை திருப்பவும் தோல்வியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேவையில்லாமல் இப்படி ஒரு நாடகத்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் பாகிஸ்தான் நடத்திய இந்த நாடகம் தேவையற்றது என்றும், தற்போது ஆண்டி பயகிராஃப்ட் மேட்ச் நடுவராக தொடர்வதால் இது பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானம்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.