மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட நெடுந்தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணி ஒரு மாத இடைவெளிக்கு பின் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கின்றது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அதற்கு தயாராகும் விதமாக இம்முறை ஆசிய கோப்பை போட்டி டி20 போட்டிகளாக நடத்தப்படுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய வேகப்பந்து வீச்சு படையை உருவாக்க கம்பீர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.இங்கிலாந்து தொடரில் வாய்ப்பை பெறாத ஆர்ஸ்தீப் சிங் ஆசிய கோப்பை தொடரில் முக்கிய பங்காற்றுவார் என தெரிகிறது.
இதேபோல் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இளம் வீரர் மாயங் யாதவை இந்திய அணியில் சேர்க்க கம்பீர் முடிவெடுத்ததாக தெரிகிறது. மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் மாயங், ஏற்கனவே இந்திய அணியில் விளையாடி இருக்கிறார்.
பும்ராவை போல் மாயங் யாதவ் முக்கிய ஆயுதமாக மாற்ற கம்பீர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாட வைக்க கம்பீர் முயற்சி செய்தார். ஐபிஎல் தொடரில் விளையாடிய நிலையில் மாயங் யாதவ்க்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வர ஆறு மாதத்தில் இருந்து எட்டு மாதங்கள் வரை ஆகலாம் என தெரிகிறது.
இதன் காரணமாக மாயங் யாதவ், ஆசிய கோப்பை போட்டிக்கு திரும்புவது என்பது சந்தேகம்தான். இதனால் கம்பீரின் திட்டம் பலிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்த டி20 உலக கோப்பைக்குள் மாயங் யாதவை இந்திய அணியில் சேர்த்து அவரை சில போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என கம்பீர் முடிவெடுத்து வருகிறார். இதனால் மாயங் யாதவ் ஜனவரி மாதம் தான் முழு உடல் தகுதியை பெற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆசிய கோப்பையில் யாரை பயன்படுத்துவது என்ற சந்தேகம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.