மும்பை: பாகிஸ்தானில் நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்பதில் சிக்கல் இருக்கும் நிலையில், இதன் உச்சமாக மற்றொரு விஷயம் நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வரவேண்டும் என்பது போல பிசிசிஐ அதிரடியாக ஒரு விஷயத்தை செய்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி மாதம் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, இப்போதும் அங்கு செல்ல மறுத்துள்ளது.

இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தான் அல்லாத வேறு ஒரு நாட்டில் நடத்த வேண்டும் என பிசிசிஐ மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதற்கு ஒப்புக் கொள்ளாத போதும், அதற்கான விஷயங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துவங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு, பிசிசிஐ மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்த நிலையில், அதே 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த உள்ளது பிசிசிஐ. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. அதன்படி 2025 ஆசிய கோப்பை தொடர் டி20 தொடர் வடிவில் இந்தியாவிலும், 2027 ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் தொடர் வடிவில் வங்கதேசத்திலும் நடைபெற உள்ளன.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறும். அந்த தொடரில் பங்கேற்க உள்ள ஆறு அணிகளில் ஒன்றான பாகிஸ்தான், இந்தியா வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஆசிய கோப்பை போன்ற முக்கிய தொடரில் விளையாடினால் அதிக வருமானம் கிடைக்கும்.
அதை விட்டுவிட்டு பாகிஸ்தானும், இந்தியா போல நாங்கள் இந்தியா வர மாட்டோம் என மல்லுக்கட்டுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்க இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லாவிட்டால், அடுத்து செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வரமாட்டோம் என பாகிஸ்தான் சொல்லக்கூடும். அப்படி ஒரு இக்கட்டான ஒரு நிலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால், பிசிசிஐ அதிக செல்வாக்கு கொண்டுள்ளதால் நிச்சயம் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பாது எனவும், அதே சமயம் வேறு ஒரு இடத்தில் தான் இந்திய அணி தனது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை ஆடும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வட்டாரத்தில் கூறப்படுகிறது.