மிர்பூர்: ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை டுவென்டி 20 தொடர் இன்று வங்கதேசத்தில் தொடங்கியது. மிர்பூரில் நடக்கும் முதல் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின.

டோணிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதால் அவர் முதல் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் டாஸ் போடுவதற்காக டோணி வங்கதேச அணி கேப்டன் மொர்தஸாவுடன் மைதானத்துக்கு வந்தார். இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மஷ்ரேப் மொர்தஸா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், தவான் ஜோடி களமிறங்கினர். தவான் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோஹ்லி 8 ரன்களில் வெளியேற இந்திய அணி தொடக்கத்திலே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்து வந்த ரெய்னா (13), யுவராஜ் (15) பெரிய அளவில் ரன் ஏதும் ஜோபிக்கவில்லை.
பொறுப்பாக ஆடிய ரோகித் அரைசதம் கடந்து 83 ரன்கள் சேர்த்தார். இவருக்கு பார்ட்னர் ஷிப் கொடுத்த பாண்ட்யா 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய டோணி கடைசி 2 பந்துகளில் ஒரு சிக்ஸர் உதவியுடன் 8 ரன்கள் எடுக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது இந்தியா. ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் அணியின் அல் அமின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களம் இறங்கிய வங்கதேச அணிக்கு சவுமியா சர்க்கார் ( 11), முகமது மிதுன் (1), இம்ரூல் கெய்ஸ் (14), சாகித் அல் ஹசன் (3), மகமதுல்லா (7) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் மொர்தஸா டக் அவுட் ஆனார். அந்த அணியின் சபீர் ரகுமான் மட்டும் ஆறுதலாக 44 ரன்கள் எடுத்தார். ரஹிம்( 16), டஸ்கின் அகமது (15) ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் சார்பில் நெஹ்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டாக்காவில் வருகிற 27ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.