டெல்லி: 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்ற கோப்பையைத் தராமல், அதனை துபாய் அலுவலகத்தில் பூட்டி வைத்து நாடகமாடி வரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோஷின் நக்விக்கு எதிராக, உலக கிரிக்கெட்டிலிருந்தே தடை விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். இதையடுத்து, கோப்பையைத் தானே எடுத்துச் சென்ற நக்வி, தற்போது, துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் கோப்பையைப் பூட்டி வைத்துள்ளார். மேலும், "தனது அனுமதி இல்லாமல் கோப்பையை எங்கும் நகர்த்தவோ, யாரிடமும் ஒப்படைக்கவோ கூடாது" என்று அவர் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோஷின் நக்வியின் இந்த அடாவடியான மற்றும் விளையாட்டுக்கு விரோதமான நடவடிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) கவனத்திற்குக் கொண்டு செல்ல பிசிசிஐ ஏற்கனவே முடிவு செய்துள்ளது. தற்போது, இந்த விவகாரத்தை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்ல பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அதன்படி, நக்வியின் செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அவரை ஐசிசி-யின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கிரிக்கெட் செயல்பாடுகளில் அவர் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ கோரிக்கை வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ வட்டாரம் பி.டி.ஐ-யிடம் கூறுகையில், "கோப்பையைத் தாமே இந்திய அணிக்கு நேரில் வழங்க வேண்டும் என்று நக்வி வற்புறுத்துவதற்கும், தொடரை நடத்திய நாடான பிசிசிஐ-க்கு அதை அனுப்ப மறுப்பதற்கும் அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்பதில் பிசிசிஐ தெளிவாக உள்ளது" என்று கூறியுள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய கடும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது. தொடர் முழுவதும் இரு அணி வீரர்களுக்கு இடையேயும் விரோதப் போக்கு நீடித்தது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்ற பொறுப்பான பதவியில் இருந்தும், மோஷின் நக்வி தொடர் முழுவதும் சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராக அரசியல் ரீதியான கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். மேலும், விதிகளின்படி, ஆசிய கோப்பை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நக்வி தனது நிலையில் பிடிவாதமாக உள்ளார்.
"இந்தியாவுக்குக் கோப்பை வேண்டுமானால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் துபாய்க்கு நேரில் வந்து தன்னிடம் இருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் கோப்பையை ஒரு தனிப்பட்ட கவுரவப் பிரச்சினையாக மாற்றி, இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ள மோஷின் நக்வியின் செயல், உலக கிரிக்கெட் அரங்கில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.