மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவரும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்விக்கு விளையாட்டு அறிவே இல்லை என கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் மதன் லால். சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆசிய கோப்பை தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, கோப்பையும் பதக்கங்களும் வழங்கப்படவில்லை.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருக்கும் மோஷின் நக்வி இந்திய அணிக்குக் கோப்பையும் பதக்கங்களும் வேண்டுமானால், கேப்டன் சூர்யகுமார் யாதவ் துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த நிபந்தனையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த நாடகம் முற்றிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால், மோஷின் நக்வியின் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தச் சர்ச்சையின் தொடக்கப் புள்ளி, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாதான். மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் விரும்பாததால், அவரைப் புறக்கணித்தனர். இதன் காரணமாக, இந்திய அணிக்குக் கோப்பையோ, பதக்கங்களோ வழங்கப்படாமலேயே பரிசளிப்பு விழா பாதியில் நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் வீரர்கள் தங்களின் இரண்டாம் இடத்திற்கான பதக்கங்களைப் பெற்ற பிறகு, அந்த அணியின் கேப்டன் சல்மான் ஆகா, தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகைக்கான காசோலையை ஆத்திரத்தில் தரையில் வீசி எறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள மதன் லால், மோஷின் நக்வியின் முதிர்ச்சியற்ற நடத்தையை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
"இப்படிப்பட்ட விஷயங்கள் நடந்திருக்கவே கூடாது. வீரர்கள் கோப்பையை ரசிகர்கள் முன்னிலையில், நேரலை தொலைக்காட்சியில் உயர்த்திப் பிடிக்கும்போதுதான் அதற்கு ஒரு மரியாதை. மோஷின் நக்விக்கு விளையாட்டு பற்றிய அறிவே இல்லை. ஒரு விளையாட்டை எப்படி விளையாட வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. இந்திய அணியைச் சேர்ந்த பலர் மேடையில் காத்து நின்றுகொண்டிருந்தனர். அவர், வேறு யாரிடமாவது கோப்பையை இந்திய அணிக்குக் கொடுக்குமாறு சொல்லியிருக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், தனது நற்பெயரையும், தன் நாட்டின் நற்பெயரையும் முற்றிலுமாகச் சிதைத்துவிட்டார்" என்று மதன் லால் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கோப்பையைப் பெற சூர்யகுமார் யாதவ் துபாய்க்கு வர வேண்டும் என்ற நக்வியின் நிபந்தனையையும் அவர் கடுமையாக விமர்சித்தார். "கோப்பையை வாங்குவதற்காக சூர்யகுமார் யாதவ் ஏன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்? இந்தியா போட்டியில் வென்றுவிட்டது. அவர்களை மைதானத்திலேயே கோப்பையுடன் கொண்டாட அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு விளையாட்டு அறிவு இல்லாததால் இப்படி நடந்துகொள்கிறார். அவர்களுடைய நாட்டில் எல்லாமே ராணுவத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது" என்று மதன் லால் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.