மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி எதிர்கொள்ள உள்ளது. ஆசிய போப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்தியா தக்க வைக்குமா ?
அல்லது இலங்கை அதனை சமன் செய்யுமா இல்லை பாகிஸ்தான் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடரின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர் தான். அவர் மொத்தமாக 971 ரன்கள் இந்த தொடரில் குவித்திருக்கிறார். சராசரி 51 ஆகும். ஆசிய கோப்பை வரலாற்றில் இரண்டு சதம் ஏழு அரை சதம் ஆகியவற்றை சச்சின் டெண்டுல்கர் ஆடி இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா. இவர் 22 போட்டிகளில் விளையாடி 745 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் ஒரு சதமும் ஆறு அரை சதமும் அடங்கும். மேலும் 2018 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தற்காலிக கேப்டனாக செயல்பட்டு ஆசிய கோப்பையை கைப்பற்றினார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் மகேந்திர சிங் தோனி, 19 போட்டிகளில் விளையாடி 648 ரன்கள் தோனி அடித்திருக்கிறார். இதில் சராசரி 64 என்று அளவில் இருக்கிறது. தோனி ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு சதம் மூன்று அரை சதம் அடித்துள்ள நிலையில் 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டு இரண்டு முறை ஆசியக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் விராட் கோலி. வெறும் 11 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ள விராட் கோலி 613 ரன்களை குவித்துள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆக பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் விராட் கோலி 300 ரன்களுக்கு மேல் அடித்தால் முதல் இடத்தைப் பிடிக்க கூட வாய்ப்பு இருக்கிறது.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் கௌதம் கம்பீர். இந்த தொடரில் அவர் மொத்தமாக 573 ரன்கள் அடித்து இருக்கிறார்.இதில் ஒரு சதமும் ஐந்து அரை சதமும் அடங்கும். சராசரியாக 44 ரன்கள் அடித்திருக்கும் கௌதம் கம்பீர், 2010 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார்.