டெல்லி: உடல் தகுதியுடன் இல்லாததால்தான் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
ஒழுங்கீனம், உடல் தகுதியுடன் இல்லாதது உள்ளிட்டவை காரணமாக யுவராஜ் சிங்குக்கு ஆசியா கோப்பைக்கான இந்திய அணியில் இடம் தரப்படவில்லை. இதை பலரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும் கிரண் மோரே போன்ற சிலர் விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் யுவராஜ் சிங் நீக்கம் குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்,
எந்த ஒரு வீரரையும் பற்றி நான் தனியாக சொல்ல முடியாது. ஆனால் யார் யாருக்கு உடல் தகுதி இருந்ததோ அவர்களை மட்டுமே அணிக்கு தேர்வு செய்தோம். உடல் தகுதி பெறாதவர்களை நீக்கி இருக்கிறோம்.
ஆசிய கோப்பை போட்டிக்கு சிறப்பான வீரர்களை தேவை என்பதால் எல்லா தகுதிகளையும் கொண்ட வீரர்கள் தேர்வு செய்து உள்ளோம்.
உடல் திறன் மற்றும் பீல்டிங் இரண்டுமே மிக முக்கியமானது. கடந்த ஒரு வருடத்தில் வீரர்களின் முழு திறனையும் ஆய்வு செய்து தகுதியான வீரர்களை தேர்ந்தெடுத்தோம். கேப்டன் டோணியுடன் முழுமையாக ஆலோசனை நடத்தி வெற்றி வாய்ப்பு உள்ள அணியை தேர்வு செய்து இருக்கிறோம்.
சமீப கால போட்டிகள் பலவற்றில் பீல்டிங் சரி இல்லாததால் தான் இந்திய அணி தோற்று உள்ளது. மூத்த வீரர்கள் உள்ளிட்ட பல வீரர்கள் சிறிது காலமாக சரியாக ஆடவில்லை. அதே நேரத்தில் சில இளம் வீரர்கள் சிறப்பாக ஆடுகின்றனர். அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.