கொழும்பு : வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தெதாடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா ஏ அணியும், வங்கதேசம் ஏ அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
வங்கதேச ஏ அணியில் மெஹதி ஹசன் போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் இருந்தனர். ஆனால், இந்தியாவில் முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சாய் சுதர்சன் 21 ரன்களும், அபிஷேக் சர்மா 34 ரன்களும் சேர்த்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நின் ஜோஸ், மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களான ரியான் பராக் ,துருவ் ஜூரல் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, கேப்டன் யாஷ் தூல் மட்டும் பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஹங்கர்கேகர் 15 ரன்களிலும், சுதார் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, யாஷ் தூல் மட்டும் கடைசி வரை போராடி 66 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய ஏ அணி 211 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச ஏ அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய முகமது நைம் 38 ரன்களும், தன்சித் ஹசன் 51 ரன்களும் எடுக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 70 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து, இந்திய ஏ அணி சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து கொண்டு விக்கெட் வேட்டையை நடத்தினர்.
தொடக்க ஜோடியை தவிர மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேறினர். சைப் ஹசன் 22 ரன்களும், மஹமுதுல் ஹசன் 20 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச ஏ அணி சரிவை நோக்கி சென்றது. குறிப்பாக சிஎஸ்கே வீரர் நிஷாந்த் சிந்து அபாராமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்க்க, வங்கதேச ஏ அணி 34.2 ஓவரில் 160 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து வரும் ஞாயிற்றுகிழமை இந்திய ஏ அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.