கொழும்பு : 2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா மோத உள்ளன. ஐந்து முக்கிய பவுலர்கள் காயமடைந்தாலும் இந்தப் போட்டிக்கு இலங்கை அணி சரியான திட்டம் ஒன்றை வகுத்து தயார் ஆகி இருக்கிறது.
பாதி அணியாக காட்சி அளிக்கும் இலங்கை அணியிடம் இந்திய அணி தோற்றால் அது பெரும் பேசுபொருளாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வீரர்கள் காயம் : இலங்கை அணி ஆசிய கோப்பை தொடர் தொடங்கும் முன்பு இருந்தே தன் முக்கிய பவுலர்களை ஒன்றன் பின் ஒருவராக இழந்து வந்தது. வானிண்டு ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷங்கா, லாஹிரு குமாரா, மகீஷ் தீக்ஷனா என இறுதிப் போட்டிக்கு முன்பு வரை காயங்களால் வீரர்களை இழந்தது இலங்கை அணி.
மைதானம்தான் ஆயுதம் : இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு மைதானத்தை ஆயுதமாக பயன்படுத்த திட்டம் தீட்டி இருக்கிறது. இறுதிப் போட்டி நடைபெறும் கொழும்பு மைதானம் இயல்பாகவே ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதை தயார் செய்யும் போது முழுக்க முழுக்க ஸ்பின் மட்டுமே எடுபடும் அளவுக்கு மாற்ற இலங்கை கிரிக்கெட் பின்னணியில் வேலை செய்யலாம் என்ற தகவல்கள் வருகின்றன.

நான்கு ஸ்பின் பவுலர்கள் : ஏற்கனவே, சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியின் 9 விக்கெட்களை கைப்பற்றிய டுனித் வெல்லாலகே மற்றும் சரித் அசலங்காவுடன் மேலும் இரண்டு ஸ்பின்னர்களை களமிறக்க இலங்கை முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் பலவீனம் : இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடி உள்ளது. அந்தப் போட்டியிலும் ஸ்பின் பந்துகளை சமாளிக்க கஷ்டப்பட்டு 213 ரன்களில் ஆல்-அவுட் ஆகி இருக்கிறது. அதே நிலை, மீண்டும் ஏற்பட்டால் கோப்பை வெல்வது மிகவும் கடினம் ஆகி விடும். எனவே, இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின் பந்துவீச்சை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். அதே சமயம், இந்திய அணியும் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜாவை வைத்து இலங்கை விக்கெட்களை வீழ்த்த திட்டமிட வேண்டும். இலங்கையை சமாளிக்குமா இந்தியா?