கொழும்பு: ஆசியக் கோப்பை தொடரில் அக்சர் படேல் காயமடைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படாமல் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் படேல் காயமடைந்தார். இடதுகை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாது என்று பார்க்கப்படுகிறது. இதனால் 3வது சுழற்பந்துவீச்சாளராக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது.

ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடரில் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய அணிகளே வெற்றிபெற்றுள்ளன. நேற்றைய ஆட்டத்தில் கூட 3 ஸ்பின்னர்களுடன் விளையாடிய வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தியது. இதனால் ஆசியக் கோப்பையை வெல்வதற்கு 3வது ஸ்பின்னர் அவசியம் என்பதை உணர்ந்து இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை அழைத்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலையிலேயே இலங்கை புறப்பட்ட வாஷிங்டன் சுந்தர், இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இலங்கை அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இலங்கை அணியின் தீக்சனாவை போல் வாஷிங்டன் சுந்தரும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்.
அக்சர் படேல் அளவிற்கு கீழ்வரிசை பேட்டிங்கில் அசத்தக் கூடியவர். அதுமட்டுமல்லாமல் இடதுகை ஸ்பின்னர், சைனா மேன் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் என்று மூன்று கவலையுடன் இந்திய அணி களமிறங்கும் சூழல் அமையும். இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தரின் தேர்வு சரியானதாக இருந்தாலும், அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆஃப் ஸ்பின்னர் மற்றும் கீழ் வரிசையில் பங்களிக்கக் கூடிய பேட்ஸ்மேன் தேவை என்று சிந்தித்த ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட், அதனை இந்திய அணிக்காக நீண்ட காலமாக செய்து வரும் அஸ்வினை தேர்வு செய்யாமல் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் ஷிகர் தவானை போல் ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்திய அணி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுகிறாரா என்ற விவாதம் தொடங்கியுள்ளது.