துபாய்: 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் (சனிக்கிழமை) நடைபெறவிருந்த, இரு அணி கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பாரம்பரிய போட்டோஷூட் நிகழ்ச்சியை இந்திய அணி புறக்கணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் கேட்டபோது, அவர் புன்னகையுடன் அளித்த நக்கலான பதில், இந்த மோதலுக்கு மேலும் எண்ணெய் ஊற்றியுள்ளது.
இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள், இரு அணி கேப்டன்களும் செய்தியாளர்களைச் சந்திப்பதும், கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு மரபு. ஆனால், இந்திய அணி இந்த முறை போட்டோஷூட்டை புறக்கணித்ததோடு, போட்டிக்கு முந்தைய கட்டாய செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவில்லை. இந்திய முகாமிலிருந்து யாரும் ஊடகங்களைச் சந்திக்காத நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் போட்டோஷூட்டை புறக்கணித்தது குறித்துக் கேட்டபோது, சல்மான் அகா புன்னகையுடன், "அது அவர்களின் விருப்பம், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்" என்று பதிலளித்தார். "நாங்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவோம். மற்றதெல்லாம் அவர்களைப் பொறுத்தது. அவர்கள் வர விரும்பினால் வரலாம், வர விருப்பமில்லை என்றால் வர வேண்டாம்" என்றும் அவர் சிரித்துக் கொண்டே கூறினார். அவர் பேசிய விதம் சூடேற்றும் வகையில் இருந்தது.
ஹாரிஸ் ரவுஃப் போன்ற வீரர்கள் களத்தில் காட்டிய ஆக்ரோஷமான சைகைகள் குறித்துப் பேசிய சல்மான் அகா, தனது வீரர்களுக்கு ஆதரவாகவே பேசினார். "ஒவ்வொரு தனிப்பட்ட வீரருக்கும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஒரு வேகப்பந்து வீச்சாளரை உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டாம் என்று தடுத்தால், அப்புறம் என்னதான் இருக்கிறது? அது அவமரியாதையாக இல்லாத வரை, நான் யாரையும் தடுக்க மாட்டேன்" என்று கூறி, தனது வேகப்பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷம் அவர்களது விளையாட்டின் ஒரு பகுதி என்பதை நியாயப்படுத்தினார்.
இந்தியாவின் 'கைகுலுக்க மாட்டோம்" என்ற கொள்கை குறித்தும் சல்மான் அகா தனது கருத்தைப் பதிவு செய்தார். "நான் 2007-ல் U-16-ல் விளையாடத் தொடங்கினேன். எந்த அணிகளும் கைகுலுக்காமல் இருந்ததை நான் பார்த்ததே இல்லை. இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் இதைவிட மோசமாக இருந்த காலத்தில்கூட, நாங்கள் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறோம். இது நடந்திருக்கக் கூடாது" என்று அவர் கூறினார். இந்த வார்த்தை மோதல்கள், களத்திற்கு வெளியே நிலவும் இந்த பனிப்போர், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.