துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஒரே ஒரு பந்தை மட்டும் சந்தித்து, இந்திய அணியின் மறக்க முடியாத நாயகனாக ரிங்கு சிங் மாறியிருக்கிறார். தொடர் முழுவதும் அணியில் இருந்தும், களத்தில் இறங்க வாய்ப்பு கிடைக்காமல் வாட்டர் பாயாக இருந்த ரிங்கு சிங், இறுதிப் போட்டியில் தான் பெற்ற ஒரே வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்துள்ளார்.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணியில் ரிங்கு சிங் இடம்பெற்று இருந்தார். ஆனால், குரூப் சுற்றிலும் சூப்பர் ஃபோர் சுற்றிலும் நடந்த ஆறு போட்டிகளில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் ஓமன் அணிக்கு எதிரான போட்டியிலும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் சில இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அப்போதும் ரிங்கு சிங்குக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் ஒரு வாட்டர் பாயாக மட்டுமே செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், இறுதிப் போட்டியின் போது இந்திய அணியில் ஒரு சிக்கல் இருந்தது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், அவரால் இறுதிப் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், ரிங்கு சிங் இந்திய அணியின் ஆடும் லெவனில் முதல் முறையாக இடம் பிடித்தார். இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஆடிய அவருக்குப் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடிக் கொண்டிருந்தபோது, கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போதுதான் ரிங்கு சிங்குக்கு பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைத்தது.
கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளைத் திலக் வர்மா சந்தித்தார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த திலக் வர்மா, இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதை எடுத்து இந்திய அணி ஒரு ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. அப்போது நான்காவது பந்தைச் சந்தித்த ரிங்கு சிங், அழகாக ஒரு பவுண்டரி அடித்தார். அதன் மூலம் இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் 7 போட்டிகளில் கடைசிப் போட்டியில் மட்டும் வாய்ப்பு பெற்று, அதிலும் கடைசிப் பந்தில் மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்ற ரிங்கு சிங், அதில் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றதற்கான ரன்களை அடித்து அசத்தினார். ஃபினிஷர் என்ற அடையாளத்துடன் இருக்கும் ரிங்கு சிங், அதற்கு ஏற்பவே வெற்றிக்கான ரன்களை அடித்ததன் மூலம் இந்தியாவின் மறக்க முடியாத நாயகனாக மாறினார்.