துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 41 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. களத்தில் வீரர்கள் காட்டிய ஆக்ரோஷம், பரஸ்பரப் புகார்கள், அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் எனப் பெரும் பரபரப்புக்கு மத்தியில், துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று (செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை) இரவு 8:00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
இந்த மாபெரும் கிரிக்கெட் யுத்தத்தில், வீரர்களின் திறமைக்கு இணையாக, துபாய் ஆடுகளத்தின் தன்மையும், அன்றைய வானிலையும் போட்டியின் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். துபாய் பிட்ச் மற்றும் வானிலை குறித்து பார்க்கலாம்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் கிட்டத்தட்ட சம வாய்ப்பை வழங்கும் ஒரு ஆடுகளமாகும். போட்டியின் ஆரம்பத்தில், புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இது தொடக்க ஆட்டக்காரர்களின் கவனத்தையும், திறமையையும் சோதிக்கும். முதல் சில ஓவர்களை நிதானமாகக் கடந்துவிட்டால், அதன்பிறகு ரன் குவிப்பது எளிதாகிவிடும்.
ஆடுகளத்தில் நிலைத்து நின்று, ஆட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப விளையாடும் பேட்ஸ்மேன்கள், இங்கே பெரிய ஸ்கோர்களைக் குவிக்க முடியும். ஆரம்பகட்ட ஸ்விங்கைத் தாண்டி, போட்டியின் பிற்பகுதியில் பந்துவீச்சாளர்கள் தங்களது துல்லியம் மற்றும் கட்டுப்பாடு மூலமே விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்குமே இது பொருந்தும்.
துபாயில் இரவு நேரப் போட்டிகளில் பனிப்பொழிவு ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். போட்டியின் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், பந்து ஈரப்பதமாகி, பந்துவீச்சாளர்களின் பிடிமானத்தைக் குறைத்துவிடும். இதனால், இரண்டாவது பாதியில் பந்துவீசுவது கடினமாக இருக்கும். எனவே, டாஸ் வெல்லும் கேப்டன், பந்துவீச்சைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
அக்குவெதர் (AccuWeather) அறிக்கையின்படி, செப்டம்பர் 28 அன்று துபாயில் அனல் பறக்கும் வெயில் நிலவும். போட்டியின்போது வெப்பநிலை 38° செல்சியஸ் ஆக இருக்கும். ஆனால், காற்றின் ஈரப்பதம், வெயில் ஆகியவற்றால், உண்மையில் உணரப்படும் வெப்பம் 42° செல்சியஸ் ஆக இருக்கும். இந்தக் கடுமையான வெப்பம், வீரர்களின் உடல்நிலைக்கு ஒரு பெரிய சவாலாக அமையும்.
இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி, தோல்வியைச் சந்திக்காத ஒரே அணியாக, அசுர பலத்துடன் வலம் வருகிறது. ஆடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அபிஷேக் ஷர்மாவின் 200-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட், குல்தீப் யாதவின் அபாரமான கம்பேக் (13 விக்கெட்டுகள்) என இந்திய அணி அனைத்து துறைகளிலும் வலுவாக உள்ளது.
மறுபுறம், பாகிஸ்தான் அணியின் பயணம், தட்டுத் தடுமாறி, த்ரில் வெற்றிகளுடன் இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. அவர்களது பேட்டிங் தொடர்ந்து ஒரு கவலையாகவே இருந்து வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறியது போல, "இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை, கடந்த கால ஃபார்மிற்கு அதிக முக்கியத்துவம் இல்லை." எனவே, காகிதத்தில் இந்திய அணி வலுவாக இருந்தாலும், இறுதிப் போட்டி போன்ற அழுத்தம் நிறைந்த ஆட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்திய அணி ஒரு சிறிய தவறையும் செய்யாமல், பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.