துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிக மோசமாகப் பேட்டிங் செய்து தனது விக்கெட்டை இழந்தது, இந்திய கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமே சூர்யகுமார் யாதவின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.
ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன் நடந்த ஆறு போட்டிகளில் அவர் 71 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், முக்கியமான இறுதிப் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் வெறும் ஐந்து பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாம் வரிசையில் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 பந்துகளைச் சந்தித்தார். பந்தைச் சரியாக அடிக்க முடியாமல் அவர் திணறிய நிலையில், ஐந்தாவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதும் ஆறு இன்னிங்ஸ்களில் வெறும் 72 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் போன்ற பலவீனமான அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் வெறும் மூன்று போட்டிகளில் ஆடி சூர்யகுமார் யாதவை விட அதிக ரன்கள் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற மோசமான புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி பலரும் சூர்யகுமார் யாதவை விமர்சித்து வருகின்றனர். அவர் கேப்டனாக இருப்பதால் மட்டுமே தற்போதைய இந்திய டி20 அணியில் இருக்கிறார் எனவும், இறுதிப் போட்டியில் அணியின் காலையே வாரிவிட்டார் எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கேப்டனின் மோசமான ஃபார்ம், இந்திய அணியை பாதித்தது. அதன் பின் இந்திய அணி நிதான ஆட்டம் ஆடியது.