கொழும்பு :ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் முதல்முறையாக பலப் பரிட்சை நடத்தும் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.ஆனால் இம்முறை ஏமாற்றத்திற்கு காரணம் நமது இந்திய வீரர்கள் கிடையாது. இம்முறை தவறு பாகிஸ்தானிடம் தான் இருக்கிறது. நமது அணி இதுவரை தோல்வியை தழுவாமல் இறுதிச்சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி விட்டது.
இந்த தருணத்தில் இரண்டாவது அணியாக முன்னேறப் போவது யார் என்ற இந்த முக்கியமான ஆட்டத்தில் இலங்கை இடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் 15 நாட்களில் மூன்று முறை மோதும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது. லீக் சுற்றில் முதல் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்தாலும், பாகிஸ்தான் பேட்டிங்கை மழை கெடுத்து விட்டது.

எதிலும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்திலும் மழை அடிக்கடி பெய்தால் ஒரு முழுமையான ஆட்டத்தை பார்த்த உணர்வே வரவில்லை. பைனலில் இந்தியாவும் பாகிஸ்தான் தான் மோத போகிறது என அடித்து சொன்ன அனைத்து கிரிக்கெட் விமர்சகர்களும் ஜவான் படத்தின் ஷாரூக்கான் போல் முகத்தை கட்டு போட்டு மறைத்து கொண்டார்கள்.யாருமே கொஞ்சம் கூட இதனை எதிர்பார்க்கவில்லை.
ஆனால் உலகக்கோப்பைக்கு இந்திய அணி சிறப்பாக தயாராக வேண்டும் என்றால் பாகிஸ்தானை எதிர்கொள்வதை விட இலங்கையை எதிர்கொள்வது தான் சிறப்பானதாக இருக்கும். காரணம் பாகிஸ்தானிடம் வெறும் வேதப்பந்து வீச்சு மட்டும்தான் இருக்கிறது. அவர்களிடம் இந்திய வீரர்களுக்கு சவால் அளிக்கக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை.
தற்போது உலகக்கோப்பை இந்திய ஆடுகளங்களில் தான் நடைபெற இருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் வேக பந்துவீச்சை சமாளிப்பதை விட சுழற் பந்துவீச்சை சமாளிக்க தான் அதிக பயிற்சி எடுக்க வேண்டும். மேலும் பாகிஸ்தான் அணியில் தற்போது ஷாகின் மட்டும்தான் இருக்கிறார். தற்போது காயம் காரணமாக நஷீம், ஹாரிஸ் ரவுப் இல்லாததால் பாகிஸ்தான் அணி பல்லு பிடுங்கிய பாம்பு போல் மாறிவிட்டது. ஆனால் மறுபக்கம் இலங்கை அணியோ நான்கு தரமான சுழற் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறது. குறிப்பாக வெல்லால்கலே பந்து வீச்சை இந்திய அணி எவ்வளவு எதிர் கொள்கிறதோ அவ்வளவு அவர்களுக்கு ஒரு பயிற்சியாக அமையும்.
சூப்பர் 4 லீக் சுற்றில் விராட் கோலி,கில்,ரோகித் ஆகியோர் ஆட்டம் இழக்க தற்போது மீண்டும் ஒருமுறை வெல்லால்கலேவை எதிர்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் எப்போதுமே பலம் வாய்ந்ததாக தான் இருக்கிறது. இதனால் அவர்களை இறுதிப்போட்டியில் வீழ்த்தினால் நிச்சயம் இந்தியாவின் பலம் மற்றும் உத்வேகம் பல மடங்கு அதிகரிக்கும். தோற்றால் கூட ஒரு நல்ல பயிற்சி களமாக அமையும். பாகிஸ்தானை காட்டிலும் இலங்கை பலமாக இருப்பது தான் உண்மை. இதனால் இந்த இறுதி போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.