கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை எதிர்த்து இந்தியா களமிறங்கவுள்ளது. சூப்பர் 4 சுற்றை பொறுத்தவரை இலங்கை அணி இந்தியாவிடமும், இந்திய அணி வங்கதேச அணியிடமும் தோல்வியை சந்தித்துள்ளன. இதுவரை ஆசியக் கோப்பை 7 முறை வென்றுள்ள இந்திய அணியும், 6 முறை வென்றுள்ள இலங்கை அணியும் விளையாடுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிக முறை ஆசியக் கோப்பையை வென்ற இந்தியாவின் சாதனையை ஈடு செய்ய இலங்கை அணி சொந்த மண்ணில் களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடிய போது இரவு 1 மணியாகியும் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் இருந்து வெளியேறவில்லை. இதனால் ரசிகர்களின் முழு ஆதரவும் இலங்கை அணிக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை சிறப்பாக ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோரின் தொடக்க கூட்டணியில் மாற்றங்கள் இருக்காது. கடந்த போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் விராட் கோலி களமிறங்குவார். அதேபோல் 4வது இடத்தில் கேஎல் ராகுல், 5வது இடத்தில் இஷான் கிஷன், 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா ஆகியோர் களமிற்ங்குவார்கள்.
அதேபோல் ஆல்ரவுண்டர் ஜடேஜா 7வது இடத்திலும், 8வது இடத்தில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 9வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் 10வது இடத்தில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம். ஏனென்றால் சிராஜ் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார். இதனால் கட்டுக் கோப்புடன் ஆடும் முகமது ஷமி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இறுதியாக அக்சர் படேல் இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொழும்பு மைதானத்தில் 3வது சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் களமிறங்குவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். இதனால் ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. வாஷிங்டன் சுந்தர் இடம்பெறும் பட்சட்சத்தில் 3 ஸ்பின்னர்களும் 3 வகையில் பந்துவீச்சக் கூடிய வீரர்களாக இருப்பார்கள். இதனால் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.