துபாய்: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், ஆக்ரோஷமாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும் சைகைகள் செய்த பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ அளித்த புகாரின் அடிப்படையில், ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின் போது, இந்திய ரசிகர்களை நோக்கி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற ஆக்ரோஷமான சைகைகளைச் செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளான வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃபிற்கு, அவரது போட்டிச் சம்பளத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே போட்டியில், அரைசதம் அடித்த பிறகு, தனது பேட்டை ஒரு துப்பாக்கியைப் போல பாவித்து, சுடுவது போன்ற சர்ச்சைக்குரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு, எந்தவிதமான அபராதமும் விதிக்கப்படவில்லை. அவருக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கைகுலுக்கல் சர்ச்சை, அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் எனப் பனிப்போர் நிலவி வரும் நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இந்த இரண்டு வீரர்கள் மீதும் ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது பிசிசிஐ. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி தங்கியிருந்த ஹோட்டலில், போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையில் வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், ஹாரிஸ் ரவுஃப், ஃபர்ஹான் மற்றும் பாகிஸ்தான் அணி மேலாளர் நவீத் அக்ரம் சீமா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விசாரணையின்போது, இரண்டு வீரர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக மறுத்து, 'குற்றமற்றவர்கள்' என்று வாதிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும், விசாரணைக்குப் பிறகு ஐசிசி இந்தத் தண்டனைகளை அறிவித்துள்ளது.
முன்னதாக, தனது துப்பாக்கிச் சூடு கொண்டாட்டம் குறித்துப் பேசிய ஃபர்ஹான், "அந்த நேரத்தில் தன்னிச்சையாக அப்படிச் செய்தேன். மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று நான் கவலைப்படவில்லை," என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல, குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரசியல் பேசியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர்கள் மீதும், இந்திய அணியின் கேப்டன் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுத்திருப்பது, கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.