அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி.. அமீரகத்தை பந்தாடிய வைபவ் சூர்யவன்ஷி
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இன்று தொடங்கிய அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அண்டர் 19 அணி, அமீரக அணியை 234 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் 14 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷிதான்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் அமீரக பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்தியாவின் தொடக்க வீரராகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ஆரம்பம் முதலே சரவெடியாய் வெடித்தார்.

வெறும் 95 பந்துகளைச் சந்தித்த வைபவ் சூர்யவன்ஷி, 14 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 171 ரன்களைக் குவித்து மிரட்டினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 180.00 ஆக இருந்தது. ஆரோன் ஜார்ஜ் (69) மற்றும் விஹான் மல்ஹோத்ரா (69) ஆகியோரும் அரைசதம் அடித்துத் துணைநிற்க, இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 433 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது.
அமீரகம் சரணாகதி
434 ரன்கள் என்ற எட்ட முடியாத இலக்கை துரத்திய அமீரக அணி, இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. பவர்-பிளேயிலேயே விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 53 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
பிரித்வி மது (50) மற்றும் உத்திஷ் சூரி (78*) ஆகியோர் பின்வரிசையில் போராடினாலும், அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் அமீரகம் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்து, 234 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தியத் தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. வைபவ் சூர்யவன்ஷியின் இந்த பிரம்மாண்ட இன்னிங்ஸ் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications