துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவை எதிர்கொள்ளும் போட்டிக்கு முன்பாக, பாகிஸ்தான் அணி தங்களது பத்திரிகையாளர் சந்திப்பை மீண்டும் ஒருமுறை புறக்கணித்து இருக்கிறது. இது கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சுனில் கவாஸ்கரின் கோபத்தைக் கிளறியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தொடர் அடாவடித்தனத்திற்கு, அபராதம் விதிப்பதைத் தாண்டி, அவர்களின் புள்ளிகளைக் குறைக்க வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.
இந்த சர்ச்சையின் தொடக்கப்புள்ளி, கடந்த வாரம் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியில்தான் தொடங்கியது. அந்தப் போட்டியின் முடிவில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கை கொடுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறினர். இதை மிகப்பெரிய அவமானமாகக் கருதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்ததுடன், போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்-ஐ நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

ஆனால், ஐசிசி பாகிஸ்தானின் கோரிக்கையை இரண்டு முறையும் நிராகரித்தது. இதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான் அணி, முதலில் தொடரிலிருந்து விலகப் போவதாக மிரட்டியது, பின்னர் போட்டி நடுவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு தவறான கதையை உருவாக்கியது. இந்த நாடகங்களால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. அந்தப் போட்டிக்கு முன்பும் பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணித்த பாகிஸ்தான், தற்போது இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு முன்பும் அதே செயலை மீண்டும் செய்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த தொடர் புறக்கணிப்பு குறித்து காட்டமாகப் பேசியுள்ள சுனில் கவாஸ்கர், "இதற்குப் பின்னால் என்ன மாதிரியான சிந்தனை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, பத்திரிகையாளர் சந்திப்புகள் கட்டாயமானவை. ஒருவேளை அணிகள் இதை நடத்தவில்லை என்றால், அதற்கான தண்டனைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை."
"ஆனால், இன்றைய உலகில், ஊடகங்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமானது. 'வட்டாரங்கள்' அல்லது யூகங்களை நம்புவதை விட, அணிகள் தங்களது பார்வையை நேரடியாகத் தெரிவிப்பது எப்போதும் சிறந்தது. ஒருவேளை, பகிர்ந்துகொள்ள தங்களிடம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் நினைக்கலாம், அது உண்மையில் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.
மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக (மொஹ்சின் நக்வி) இருந்தாலும், கவுன்சில் என்பது பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு என்பதை நினைவூட்டிய கவாஸ்கர், பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கான தண்டனை குறித்தும் ஒரு அதிரடியான ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
"விதிப்புத்தகத்தில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கலந்துகொள்வது கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், எதிர்காலத்தில், ஒரு அணி அதற்குக் கீழ்ப்படியத் தவறினால், அவர்களின் புள்ளிப் பட்டியலிலிருந்து ஒரு புள்ளியைக் குறைக்கலாம்." என்று அவர் கூறியுள்ளார்.