துபாய்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் கான், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை குறிவைத்து முன்வைத்துள்ள கடுமையான விமர்சனம், இரு நாட்டு ரசிகர்களிடையேயும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்து. இந்த தொடரில் செப்டம்பர் 14 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக இரு அணிகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் பசித் கான் பேசியது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் புள்ளிவிவரங்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வெறும் 12.80 என்ற சராசரியில் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோரே 18 ரன்கள்தான். இந்த பலவீனமான ரெக்கார்டை சுட்டிக்காட்டியே பசித் கான் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பசித் கான், "சூர்யகுமார் யாதவ் மற்ற எல்லா அணிகளுக்கும் எதிராகவும் ரன் குவிக்கிறார், ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் ஏனோ அவரால் ஜொலிக்க முடியவில்லை. அது வேகப்பந்து வீச்சு காரணமாகவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை, ஆனால் இது ஒரு பிரச்சினை" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் 700-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து சூர்யகுமார் யாதவ் அசத்தலாக ஃபார்மில் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான அவரது முந்தைய ஆட்டங்கள் அவருக்கு எதிராகவே பேசுகின்றன.
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் டி20 ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் முதல் பெரிய தொடர் இதுவாகும். இந்த மூத்த வீரர்களின் அனுபவத்தை இந்திய அணி நிச்சயம் இழக்கும் என்று பசித் கான் குறிப்பிட்டார்.
"விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆட்டத்திற்குள் கொண்டு வந்த அந்தத் தீவிரம், நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு குறையாக இருக்கும்," என்று கூறிய அவர், குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று அழுத்தமாக கூறினார்.
"ரவீந்திர ஜடேஜாவின் இல்லாததும் ஒரு பெரிய பிரச்சினை. அவருக்குப் பதிலாக அக்சர் படேல் இருந்தாலும், ஃபீல்டிங்கில் ஜடேஜா ஒரு அசாதாரணமான வீரர். அவரது இடத்தை நிரப்புவது கடினம்," என்று பசித் கான் மேலும் கூறினார்.
பசித் கானின் இந்தக் கடுமையான விமர்சனங்கள், களத்திற்கு வெளியே வார்த்தைப் போரைத் தொடங்கி வைத்துள்ளது. செப்டம்பர் 14 அன்று நடைபெறும் போட்டியில், தனது மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளார்.