மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. அது மட்டுமல்லாமல் டாஸ் வீசப்பட்டபோதும் போட்டி முடிவடைந்த போதும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இந்திய அணி சென்றதும், கேப்டன் சூரியகுமார் பஹல்காம் தாக்குதல் குறித்து பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதும், பாகிஸ்தான் நாட்டினரை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.
பல முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் சூரியகுமாரை பன்றியுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தான் யாரையும் விமர்சிக்கும் எண்ணம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் முகமது யூசுப்பின் இந்த பேச்சுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன்லால் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "முதலில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அவருடைய வீரர்களை எப்படி விமர்சிக்கிறார்கள் என்று பாருங்கள். தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக அவர்களது அணி தோல்வியை தழுவி வருவதால் விரக்தியில் இருக்கிறார்கள்."
"இந்த விரக்தியின் காரணமாகத்தான் மற்ற அணி வீரர்களையும் தற்போது விமர்சிக்க தொடங்கிவிட்டனர். பாகிஸ்தான் வீரர்களுக்கு படிப்பு அறிவு கிடையாது. இந்த சம்பவம் அதைத்தான் காட்டுகிறது. மற்ற நாட்டு வீரர்களை தவறாக விமர்சிப்பது என்பது சரியான விஷயம் கிடையாது. ஆனால் நாம் இதைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது. நாம் தேவையில்லாத விளம்பரத்தை பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கி வருகின்றோம்."
"இந்த விளம்பரத்தை தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது youtube மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நாம் பாகிஸ்தான் வீரர்கள் பற்றி பேசி வருகின்றோம். இதுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் இந்தியாவிற்கு எதிராக எவ்வளவு மோசமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு அவர்கள் அதிலிருந்து பயன்பெறுவார்கள். முகமது யூசுப் நடுவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்று கூறுகிறார்."
"அப்போது எதற்கு டி ஆர் எஸ் இருக்கிறது. ஒருவர் நாட் அவுட் என மூன்றாம் நடுவருக்கு நம்மால் ரிவ்யூ கேட்க முடியும். நேற்றே ஆட்டத்தில் கூட ஒரு முறை அவுட் வழங்கப்பட மூன்றாம் நடுவர் அதனை நாட் அவுட் என மாற்றி அறிவித்தார். அப்படி இருக்கும் போது எதற்காக தேவையில்லாமல் குற்றம் சாட்டுகிறீர்கள். நடுவர்கள் தவறாக முடிவு தருகிறார்கள் என தற்போது யாரும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அனைத்தும் தொழில்நுட்பத்தின் கீழ் தான் இயங்குகிறது. எதற்கு டி ஆர் எஸ் சரியாகப் பயன்படுத்த வேண்டும்? எதற்கு பயன்படுத்தக் கூடாது என்று உங்களுக்கு தான் தெரிய வேண்டும்" என்று மதன்லால் விமர்சித்துள்ளார்.