மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆறு ஆசிய நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி செப்டம்பர் 1ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தொடரில் ஆடும் ஐந்து அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உறுதியாக இந்த தொடரில் பங்கேற்கின்றன. மற்றொரு அணி இனிமேல் தான் முடிவு செய்யப்பட வேண்டும்.
அதற்கான பட்டியலில் ஹாங்காங், நேபால், ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தகுதி சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.
ஆறு நாடுகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், மற்றும் ஆறாவதாக தகுதி பெறும் அணி "ஏ" பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் "பி" பிரிவிலும் இருக்கின்றன.
2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடர், டி20 தொடராக நடத்தபட்டது. அந்த ஆசியக் கோப்பைக்கு பின் உலக டி20 சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றதால், அப்போது மட்டும் டி20 தொடராக ஆசிய கோப்பை நடந்தது.
இந்த முறை ஒருநாள் போட்டிகளாகவே நடக்க உள்ள ஆசிய கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆறாவதாக தேர்ச்சி பெறும் அணிகள் மற்ற அனுபவ அணிகளை தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. முதல் போட்டியே இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்தியாவுக்கு இணையான சவாலாக பாகிஸ்தான் அணி இருக்கும்.