துபாய்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை போட்டி ஒருபக்கம் சர்ச்சையை வளர்க்கும் நிலையில், களத்திற்கு வெளியே முன்னாள் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் ஷாஹித் அப்ரிடி மோதி வருகின்றனர். முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதானிற்கும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி-க்கும் இடையேயான வார்த்தைப் போர், தற்போது சமூக வலைதளங்களில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அப்ரிடியின் சமீபத்திய தாக்குதலுக்கு, "அண்டை நாட்டினர் என் பெயரால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்" (Obsessed) என்று இர்பான் பதான் பதிலடி கொடுத்து இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 2025-ல், இர்பான் பதான் ஒரு நேர்காணலில் அப்ரிடி பற்றி சொன்ன ஒரு பழைய சம்பவம்தான் இந்த சர்ச்சையின் ஆரம்பம்.

ஒருமுறை விமானப் பயணத்தின்போது, பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் முன்னிலையில், ஷாகித் அப்ரிடி தன்னை ஒரு "குழந்தை" என்று ஏளனமாக அழைத்ததாக பதான் குறிப்பிட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "பாகிஸ்தானியர்கள் என்ன மாதிரியான இறைச்சியை சாப்பிடுவார்கள், நாய் இறைச்சி கிடைக்குமா?" என்று ரசாக்கிடம் கேட்டதாகவும், ஆச்சரியத்துடன் ரசாக் ஏன் இப்படிக் கேட்கிறாய் என்றதற்கு, "அவர் (அப்ரிடி) நாய் இறைச்சியை சாப்பிட்டிருக்கிறார் போல, நீண்ட நேரமாக குரைத்துக்கொண்டே இருக்கிறார்" என்று பதிலளித்ததாகவும், அதன் பிறகு அப்ரிடியால் எதுவும் பேச முடியவில்லை என்றும் பதான் அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.
பதானின் இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இதற்கு சமீபத்தில் பதிலளித்த ஷாகித் அப்ரிடி, இது ஒரு "பொய்" என்றும், இர்பான் பதான் ஒரு "உண்மையான ஆண்மகன் அல்ல" என்றும் கடுமையாகத் தாக்கினார். "நேருக்கு நேராக நின்று பேசுபவர்களைத்தான் நான் உண்மையான ஆண்மகனாகக் கருதுவேன். அவர் என் முதுகுக்குப் பின்னால் பேசிக்கொண்டிருக்கிறார். என் முகத்திற்கு நேராகச் சொன்னால் மட்டுமே என்னால் பதிலளிக்க முடியும். அவருடைய பொய்களுக்கு நான் எப்படி பதிலளிப்பது?" என்று அப்ரிடி ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சீறியிருந்தார்.
அப்ரிடியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது இர்பான் பதானின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இர்பான் பதான் தனது 'எக்ஸ்' (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். "நீங்கள் சொல்வது சரிதான்: 'இந்த அண்டை நாட்டு முன்னாள் வீரர்களும், ஊடகங்களும் இர்பான் பதான் என்ற பெயரால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்' என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் விமர்சனங்களை அவர் கண்டுகொள்ளவில்லை என்பதையும், அவர்கள் தன் பெயரைப் பயன்படுத்திப் பிரபலமடைய முயற்சிப்பதாகவும் மறைமுகமாகச் சாடுவதாக அமைந்தது. ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியின் முடிவில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, பாகிஸ்தான் வீரர்களுக்குக் கை கொடுக்க மறுத்தது, இரு நாட்டு கிரிக்கெட் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்தச் செயலுக்காக அப்ரிடி, முகமது யூசுப், சோயிப் அக்தர் போன்ற பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்தனர். இந்தச் சூழ்நிலையில், இர்பான் பதான் மற்றும் அப்ரிடிக்கு இடையேயான இந்த வார்த்தைப் போர், இரு நாட்டு ரசிகர்களிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21 அன்று, துபாய் சர்வதேச மைதானத்தில் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ள நிலையில், களத்திற்கு வெளியேயான இந்த மோதல்கள், போட்டியின் மீதான எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் பல மடங்கு கூட்டியுள்ளது.