துபாய்: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் நடந்த பயிற்சி ஆட்டத்திற்குப் பிறகு ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் நடத்திய நீண்ட ஆலோசனை, சஞ்சு சாம்சனின் எதிர்காலம் குறித்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2025 ஆசியக் கோப்பைக்கான பயிற்சிகளை இந்திய வீரர்கள் தொடங்கியுள்ளனர். முதல் நாள் பயிற்சி இலகுவாக இருந்த நிலையில், இரண்டாம் நாள் வீரர்களுக்குக் கடுமையான உடற்பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 'ப்ரான்கோ டெஸ்ட்' எனப்படும் ஓட்டப் பந்தயமும் அடங்கும்.
முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சஞ்சு சாம்சன், இந்த ஓட்டத்தின் போது சற்று சிரமப்பட்டு, வலியுடன் மைதானத்தை விட்டு வெளியேறி ஐஸ் பாக்ஸில் அமர்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாம்சன் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியபோது, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அவர்களுடன் துணை கேப்டன் சுப்மன் கில்லும் இணைந்துகொண்டார். இந்த உரையாடல், சாம்சனின் வாய்ப்புகளை மேலும் மங்கச் செய்துள்ளது.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு சஞ்சு சாம்சன் பயிற்சி செய்யாமல் அமைதியாக அமர்ந்து இருந்தார். வார்ம்-அப் ஓட்டத்திற்குப் பிறகு, மாலை முழுவதும் அவர் ஐஸ் பாக்ஸிலேயே அமர்ந்து இருந்தார். மற்ற வீரர்கள் வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டதை அவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
சுப்மன் கில், ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சென்டர் வலைப் பயிற்சியில் தங்கள் பேட்டிங் திறமைகளை காட்டினர். முதல் இரண்டு மணி நேரத்திற்கு, அபிஷேக் சர்மா, கில், சூர்யகுமார், திலக் வர்மா, ஜிதேஷ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கே வலைப்பயிற்சி நேரம் ஒதுக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் ஃபீல்டிங் பயிற்சியிலும் பங்கேற்கவில்லை. ஆல்-ரவுண்டர்களுடன் மிகக் குறுகிய நேரமே அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
சஞ்சு சாம்சன் பயிற்சியில் இருந்து விலகி இருந்த நிலையில், பயிற்சியாளர் கௌதம் கம்பீர், மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவுடன் நெருக்கமாகச் இருந்தார். ஜிதேஷ் சர்மா நீண்ட நேரம் சென்டர் விக்கெட் நெட்ஸில் பயிற்சி மேற்கொண்டார். கம்பீர் அவருக்குப் பல்வேறு ஷாட்களை ஆடுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
பயிற்சி அமர்வுகளை வைத்து இறுதி அணியைத் தீர்மானிக்க முடியாது என்றாலும், ஜிதேஷ் சர்மாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம் சஞ்சு சாம்சனுக்கு போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என தெரிகிறது.