பில்டெப்பெல்லாம் தேவையில்லை.. எல்லா போட்டியையும் போலத்தான் பாக். மேட்ச்சும்.. கோஹ்லி!
மிர்பூர்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து பெரும் எதிர்பார்ப்பு, பில்டப் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதை வழக்கமான போட்டி போலத்தான் பார்க்கிறோம் என்று விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
ஆசியாக் கோப்பை மற்றும் டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பதட்டம், பரபரப்பும் உள்ளது.
ஆனால் கோஹ்லியோ, இதெல்லாம் வழக்கம் போல ஒரு போட்டிதான் என்று கூறுகிறார். அது மட்டுமல்லாமல் தன்னிடமோ, பிற வீரர்களிடமோ எந்தப் பதட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளை முதல் மோதல்
இரு அணிகளும் நாளை ஆசியாக் கோப்பைப் போட்டியில் மோதவுள்ளன. கடந்த உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இரு அணிகளும் நாளை முதல் முறையாக மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 19ல் அடுத்த போட்டி
அடுத்து டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் மார்ச் 19ம் தேதி இரு அணிகளும் மோதவுள்ளன. ஆசியாக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் அங்கும் இரண்டு பேரும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.

எல்லாமே வழக்கம் போலத்தான்
இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், அனைத்துப் போட்டிகளையும் நாங்கள் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறோம். பாகிஸ்தானுடன் விளையாடுவதால் அது ஸ்பெஷல் போட்டியாகி விடாது. அதுவும் வழக்கமான கிரிக்கெட் போட்டிதான்.

மனதளவிலும் மாற்றம் இல்லை
பாகிஸ்தானுடன் விளையாடும்போதும் பேட், பந்துடன்தான் விளையாடுவோம். மனதளவிலும் எங்களுக்கு மாற்றமோ, வித்தியாசமோ இருக்காது. எல்லாமே சமம்தான்.

பாகிஸ்தான் வலுவான அணி
பாகிஸ்தான் அணி வலுவான அணி. அவர்களுடனான போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். ஆரோக்கியமான போட்டி எப்போதுமே நல்லதுதான்.

வெளியில் பில்டப் இருந்தாலும்
வெளியில் இப்போட்டி குறித்து பெரிய பில்டப் இருந்தாலும் கூட நாங்கள் இயல்பாகத்தான் இருக்கிறோம் என்றார் கோஹ்லி. ஆசியாக் கோப்பைப் போட்டியில் முதல் போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியிருந்தது இந்தியா என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications