துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக, பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா, இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசியதோடு, இந்திய அணிக்கு ஒருவித எச்சரிக்கை விடுக்கும் தொனியிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
17வது ஆசிய கோப்பை தொடரான இந்தத் தொடரில்தான், முதன்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, கிரிக்கெட் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில், லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்று என இரண்டு முறையும் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் பழிதீர்க்கும் முனைப்புடன் களமிறங்கும். ஆனால், இந்தியா இந்த தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக உள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்துப் பேசியபோது, "நாங்கள் மிகவும் செட்டிலான அணியாக இருக்கிறோம். எந்த அணியையும் வீழ்த்தும் அளவிற்கு நாங்கள் ஒரு நல்ல அணி. நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம், இறுதிப் போட்டியில் அவர்களை (இந்தியாவை) வீழ்த்தக் காத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் பந்துவீச்சும், ஃபீல்டிங்குமே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தி வங்கதேசம் அழுத்தம் கொடுத்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.
இருப்பினும், கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பின்வரிசை வீரர்கள் போராடி, அணிக்கு ஒரு மரியாதைக்குரிய ஸ்கோரை (134) எட்ட உதவினர். 135 ரன்கள் என்ற எளிய இலக்கை வங்கதேசம் எளிதாக சேஸ் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
பவர்பிளேயிலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்திற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அவருடன் ஹாரிஸ் ரவுஃபும் இணைய, பவர்பிளே முடிவதற்குள் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த ஆரம்ப சரிவிலிருந்து வங்கதேச அணியால் மீளவே முடியவில்லை. ஷமிம் ஹொசைன் மட்டும் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துப் போராடினார்.
இறுதியில், வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, இந்தியாவுடன் மோதுவதை உறுதி செய்துள்ளது.